Monday, December 29, 2003

சிதம்பரம்: வறுமையே.. போ!

ப.சிதம்பரம் - வறுமையே.. போ!
கல்கி 28/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 10

* அரசியல் கட்சிகளிலிருந்து மெதுவாக பொருளாதாரத்தின் பக்கம் வருகிறார் சிதம்பரம் தனது கல்கி தொடரில். வறுமை என்றால் என்ன என்பதற்கு நல்ல விளக்கம் தருகிறார்:
வறுமையின் அடையாளங்கள் என்ன?
  • கல்வி இல்லை.
  • கைத்திறன் இல்லை
  • சொத்து இல்லை
  • வேலை இல்லை
  • வருமானம் இல்லை
* ஒரு மனிதனுக்கு மேற்சொன்ன எதுவும் இல்லை என்றால் எப்படி வறுமையிலிருந்து விடுபடுவது? இது கல்வி மற்றும் கைத்திறன் கற்பதிலிருந்துதான் என்கிறார். கல்வி/கைத்தொழில் கற்பதிலிருந்து, வேலையும், வருமானமும் கிடைக்கின்றன, அங்கிருந்து சொத்து சேர்க்க முடிகிறது.

* வறுமையை ஒழித்த காலம் என்று இருபதாம் நூற்றாண்டை மட்டுமே சிறப்பாகக் குறிப்பிட முடியும். 1900இலிருந்து 1950 வரை பல நாடுகளில், பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டது. இந்த நேரத்தில் உலகப் போர்கள் நடக்காதிருந்தால் இன்னமும் பல கோடி மக்களின் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம். இந்த நாடுகள் (அதாவது வறுமையை ஒழித்த நாடுகள் - முதலாம் உலக நாடுகள் என்று இப்பொழுது நாம் குறிப்பிடுவது) 1950-1975இல் தங்கள் நாட்டின் செல்வத்தை அதிகரித்தனர் என்கிறார்.

* 1975-2000த்தில் கூட பல ஆசிய நாடுகள் வறுமையை ஒழிப்பதில் சாதனை படைத்துள்ளன. (சிங்கப்பூர், மலேசியா, தென் கொரியா, தாய்லாந்து, தாய்வான், ஹாங்காங், மொரீஷியஸ், மாலத்தீவுகள்)

* வறுமையை ஒழிப்பது என்றால் இந்த நாடுகளில் வறுமையே இல்லை என்பதில்லை. அமெரிக்காவில் கூட ஏழைகள் உள்ளனர், ஆனால் மிகப்பெரும்பான்மையானவர்களுக்குக் கண்ணியமான, வளமான வாழ்க்கை அமைத்திருக்கிறது என்கிறார்.

* வறுமையை ஒழிக்க இந்தியாவிற்கு உள்ள ஒரே வழி முதலாளித்துவப் பொருளாதார முறையை ஏற்பதுதான் என்கிறார். அதே சமயம் இந்தியா விடுதலை பெற்ற நேரத்தில் காங்கிரஸ் (நேரு என்று படிக்கவும்) அரசாங்கம் சோஷலிசத்தை ஏற்றுக் கொண்டதில் தவறொன்றுமில்லை, அப்பொழுது அந்த முறைதான் சிறந்ததாக இருக்கும் என்று கருதப்பட்டது என்கிறார்.

* சிதம்பரம் வழங்கும் சுவையான புள்ளி விவரம்: 1900 முதல் 1950 வரை (வெள்ளைக்காரன் ராச்சியத்தில்!) இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சி ஆண்டுக்கு வெறும் 1% மட்டுமே. 1950-1980இல் ஆண்டுக்கு வளர்ச்சி 3.5%, 1980க்குப் பிறகுதான் 5% க்கு மேல் வளர்ச்சி. 1991இல் புதிய பொருளாதாரக் கொள்கையை ஏற்றபின்னர்தான் வளர்ச்சி 6%த்தைத் தாண்டியது. அடுத்த சில இதழ்களில் புதிய பொருளாதாரக் கொள்கையை விளக்குவதாகவும் சொல்கிறார்.

என் கருத்து:

* எனக்கும் சிதம்பரத்தின் கருத்து - அதாவது விடுதலை அடைந்த நேரத்தில் சோஷலிச முறைதான், முதலாளித்துவ முறையை (திறந்த போட்டிப் பொருளாதார முறையை) விட இந்தியாவை வளம்படுத்தும் என்ற காங்கிரஸின் கொள்கை - சரியென்றே படுகிறது. அப்பொழுது முழு முதலாளித்துவ முறையைப் பின்பற்றியிருக்க முடியாது. நம் நாட்டில் பங்குச் சந்தை முறை வளர்ந்திருக்கவில்லை. அரசைத் தவிர வேறு யாரிடமும் தேவையான மூலதனம் இல்லை. நாட்டில் உயர் கல்வி இல்லாமலிருந்தது - முக்கியமாக மேலாண்மைத் துறை, பொறியியல் துறை ஆகியவற்றில். அப்பொழுது அரசே பலவற்றை ஏற்று நடத்த வேண்டியிருந்தது.

* இன்று பலர் அன்றைய காங்கிரஸ் மற்றும் நேருவை சோஷலிசத்தை இந்தியாவுக்குக் கொண்டுவந்தவர் என்று இகழ்கிறார்கள் (முக்கியமாக காவி வண்ணக் கட்சியினர்). இது தவறான அணுகுமுறை. இன்று சந்தைப் பொருளாதார முறை சரியானதாகத் தோன்றலாம். அன்றைக்கு இராஜாஜி/மினூ மசானி (சுதந்திராக் கட்சியினர்) போன்ற ஒரு சிலரைத் தவிர மற்றவர்களிடம் அந்தக் கருத்து நிலவவில்லை.

* இன்றும் நமது அரசினர் பல சோஷலிசக் கருத்துக்களை மனதில் வைத்திருக்க வேண்டும் - முக்கியமாக சோஷியல் செக்யூரிடி (சமூகப் பாதுகாப்பு) என்னும் கருத்தைக் கொண்டுவராது, முழு சந்தைப் பொருளாதார முறைமை வழிபோவது நல்லதல்ல என்று தோன்றுகிறது. அமெரிக்கா முதற்கொண்டு அத்தனை மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும் இந்த சமூகப் பாதுகாப்புத் திட்டம் முறையில் உள்ளது. இதன்படி, வேலையற்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் அரசு அவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை வழங்கி வருகிறது. அந்த உதவித்தொகையில் மூன்று வேளை உணவு நிச்சயம் கிடைக்கும். எப்பொழுது நம் நாட்டில் இந்த நிலைமை வருகிறதோ (அதாவது வேலையற்றோருக்கு அரசு உயிர்வாழத் தேவையான அளவிற்கு உதவித்தொகை வழங்குகிறதோ) அன்றுதான் நம் நாடு ஏழ்மையை ஒழிப்பதில் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது எனலாம்.

கல்கி 21/12/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 9

No comments:

Post a Comment