Saturday, December 20, 2003

தலித் கிறித்துவ, முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது

கடந்த வாரத்தில் ஏகப்பட்ட நிகழ்ச்சிகள்: போடா, கட்சித்தாவல் சட்டங்களில் சட்டத்திருத்தம், போடா மற்றும் ஊழல் வழக்குகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், கிரிக்கெட்டில் இந்தியாவின் வெற்றி, செத்துப்போன சத்யேந்திர துபேவை இடையில் நிறுத்தி மத்திய அரசும், பீஹார் அரசும் செய்யும் அரசியல். இதற்கு நடுவில் அதிகம் பேசப்படாத, தி ஹிந்துவில் ஒரு மூலையில் கண்ட செய்தி, தலித் கிறித்துவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும் (தலித் இந்துக்களைப் போல) என்னும் கேள்விக்கு சமூகநீதி அமைச்சர் (எதுக்கெல்லாம் அமைச்சருங்க இருக்காங்க, பாருங்க!) சத்ய நாராயண் ஜாதீயா சொன்ன பதில்.

இந்தியாவின் தலைமைப் பதிவாளர் (Registrar General of India) இப்படிச் சொன்னாராம்:

"முஸ்லிம்களையும், இந்து சாதிகளுக்கு இணையாகப் பிரித்தால், தங்கள் மீது இந்துக்களின் பிற்போக்கான வழக்கத்தைப் புகுத்துவதாக முஸ்லிம்கள் அமைதியிழந்து கோபம் கொள்வர்."

"கிறித்துவர்களை சாதி அடிப்படையில் பிரித்துப் பதித்தால், பன்னாட்டளவில் இது பிரச்சினையில் முடியும். வெளிநாடுகளில், இந்தியா தனது சாதிப்பிரிவினையை கிறித்துவர்கள் மேல் திணிக்கிறது என்ற ஒரு கருத்தை இது தோற்றுவிக்கும்."

இதைக் காரணம் காட்டி அமைச்சர் முஸ்லிம், கிறித்துவர்களின் மனம் கோணாமலும், சர்வதேச அளவில் பிரச்சினை வராமலும் இருக்க, தலித்துகளாக இருந்து இந்து மதத்திலிருந்து இஸ்லாம், கிறித்துவ மதங்களுக்கு மாறியவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த விஷமத்தனமான கருத்து கண்டிக்கப்பட வேண்டியது.

1. முதலில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சாதியும், மதமும் தனித்தனி தளங்களில் இயங்கி வந்துள்ளன, வருகின்றன. தலித்துகளை இந்து மதத்திற்குள்ளேயே அடைத்து வைக்க என்றே இந்த இட ஒதுக்கீட்டினைப் பயன்படுத்துகின்றனர் அரசியல்வாதிகள். "அவமானத்தோடு சேர்ந்த இட ஒதுக்கீடு வேண்டுமா, இல்லை உன்னிஷ்டப்படி மதம் மாறிக்கொள், ஆனால் இட ஒதுக்கீடு கிடையாது" என்னும் உள்நோக்கம் மிகவும் வெளிப்படையாகத் தெரிகிறது.

2. பெருநகர் அல்லாதவிடங்களில் இந்திய முஸ்லிம்களும், கிறித்துவர்களும் தங்களுக்குள்ளே தாங்கள் எந்த சாதியிலிருந்து வந்திருக்கிறோம் என்பதில் தெளிவாகவே இருக்கிறார்கள். சாதிப் பிரிவினை வேறு, தீண்டாமை வேறு. இந்துக்களின் இடையில்தான் 'தீண்டாமை' தலை விரித்தாடுகிறது. ஒரு சில சாதியினரைத் தொடத்தகாதவர்கள், கோயிலுக்குள் புக அனுமதி இல்லாதவர்கள், நாலு வர்ணங்களுக்கும் அப்பாற்பட்டவர்கள், டீ குடிக்கத் தனிக்குவளை, கதிமோட்சம் இல்லாதவர்கள், ஆனாலும் இந்துவாகவே இருக்க வேண்டும் என்று மேல்சாதி இந்துக்கள் கருதுகின்றனர். கிறித்துவ, முஸ்லிம்கள் இடையே சாதி வித்தியாசம் இருந்தாலும், இந்த 'சர்ச்சுக்குள் நுழையாதே, தீட்டுப் படிந்து விட்டது', 'உனக்குத் தனி டீ டம்ளர், எனக்குத் தனி' என்பது இல்லை என்று தோன்றுகிறது.

இப்பொழுதைக்கு முக்கியமானது தீண்டாமையை ஒழிப்பது. அதன் பிறகு சாதிப் பிரிவினைகள் பற்றிப் பார்த்துக் கொள்ளலாம்.

3. இன்று பார்ப்பனர்களில் பொருளாதாரக் கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுப்போம் என்று சொல்லும் அரசியல்வாதிகள் தலித்தாக இருந்து கிறித்துவனாகவோ, முஸ்லிமாகவோ மாறினால் இட ஒதுக்கீடு கிடையாது என்றால் அது பெரும் கேலிக்கூத்து.

இந்திய முஸ்லிம்களும், கிறித்துவர்களும் துண்டு துண்டாக இருக்கிறார்கள். இதுமாதிரி விஷமத்தனமான விவாதங்கள் பாராளுமன்றத்தில் நடக்கும்போது உடனடியாக அதனை எதிர்த்து, தங்கள் மதம் சாதிப்பிரிவினைகளை அங்கீகரிக்காவிட்டாலும், பரம்பரை பரம்பரையாக பொருளாதார, சமூகக் கீழ்நிலையில் இருப்பவர்கள் கிறித்துவ, இஸ்லாம் மதங்களைப் பின்பற்றினாலும் அவர்களுக்கு அரசு தரும் சலுகைகள் இந்து மதத்தினருக்கு ஒத்ததாக இருக்க வேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.

இதில் புத்த மதத்திற்கு மாறும் தலித்துகளுக்கு என்ன சலுகைகள் கிடைக்கும் என்று தெரியவில்லை. இந்து தலித்துகளுக்குக் கிடைக்கும் அதே சலுகைகள் புத்த மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கும் கிடைக்குமா? இல்லை இந்தியத் தலைமைப் பதிவாளர், இலங்கையில் உள்ள புத்த குருமார்கள் கோபித்துக் கொள்வார்கள் என்று புருடா விடுவாரா?

No comments:

Post a Comment