Wednesday, December 17, 2003

போடா மற்றும் கட்சித் தாவல்

நேற்று இந்தியா, ஆஸ்திரேலியாவை டெஸ்டில் தோற்கடித்தது. நேற்று மற்ற சில முக்கியமான நிகழ்வுகளும் இருந்தன.

1. தீவிரவாதத் தடுப்புச் சட்டம் போடா (POTA) பற்றிய வழக்கின் மீது உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வை.கோபால்சாமி (வைகோ) உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் "சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மாநிலங்களின் கடமை. அப்படி இருக்கையில் நாட்டின் பாராளுமன்றம் போடா சட்டத்தை இயற்றியிருக்க முடியாது. அது மாநிலங்களின் சட்டமன்றங்களில்தான் இயற்றப்பட்டிருக்க வேண்டும்" என்னும் வகையில் அமைந்திருந்தது போலும். ஆனால் உச்ச நீதிமன்றம் இதனை ஏற்கவில்லை; "தீவிரவாதம் மாநிலங்களின் எல்லைகளைத் தாண்டி, நாடு முழுவதையும் உள்ளடக்கி நிகழ்கிறது. எனவே இதனைத் தடை செய்யுமாறு சட்டம் இயற்ற நாட்டின் பாராளுமன்றத்திற்கு அனுமதி உண்டு" என்று கூறியுள்ளது. மேலும் ஏற்கனவே இருக்கும் சட்டங்களால் தீவிரவாதத்தைத் தடை செய்ய முடியாது என்பதனை ஆராய்ந்த பின்னரே பாராளுமன்றம் இச்சட்டத்தை இயற்றியுள்ளது என்பதனையும் நீதிபதிகள் விளக்கியுள்ளனர்.

முதலில் வைகோ ஏன் இந்த 'டெக்னிகாலிட்டி'யைக் காரணம் காட்டி உச்ச நீதிமன்றம் சென்றார் என்று புரியவில்லை.

ஆனால் மிக முக்கியமாக, மேற்குறிப்பிட்டுள்ள தீர்ப்பில், நீதிபதிகள் இவ்வாறும் சொல்லியுள்ளனர்: "தடை செய்யப்பட்ட ஒரு பயங்கரவாத இயக்கத்துக்கு ஒருவர் கருத்து ரீதியாக ஆதரவு காட்டினார் என்பதனால் மட்டுமே போடாவின் பிடிக்குள் வர முடியாது. போடாவின் கீழ் கைது செய்யப்பட வேண்டுமானால், ஒருவர் ஒரு தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்ட வேண்டும், அல்லது அந்தத் தீவிரவாதச் செயலைச் செய்வதற்குத் துணைபோக வேண்டும்.

இதனைக் காரணம் காட்டி வைகோ போடா தனி நீதிமன்றத்திடம் தான் நிச்சயமாக தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்டவுமில்லை, தீவிரவாதச் செயலுக்குத் துணைபோகவுமில்லை என்று வாதாடலாம்.

செய்வார், விடுவிக்கப்படுவார் என்று நம்புவோம்.

2. பாராளுமன்றத்தில் போடா சட்டத்திருத்தம் வாக்கெடுப்பில் வென்றது. ஆனால் இதற்கு முன்னர், எதிர்க்கட்சிகள் அனைத்தும் வெளிநடப்பு செய்தன. அஇஅதிமுக உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். இந்த சட்டத் திருத்தம் மாநில அரசுகள் போடாவைத் தவறாகப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்காகக் கொண்டு வரப்பட்டுகிறது என்பது மத்திய அரசின் வாதம். எதிர்க்கட்சிகள் போடா தவறாகப் பயன்படுத்தப்படும் என்பது தெரிந்துதான் நாங்கள் இந்த சட்டம் நடைமுறையாகக் கூடாது என்று எதிர்த்தோம். இப்பொழுது சட்டம் தவறாகப் பயன்படுத்தப் படுகிறது என்று நீங்களே சொல்கிறீர்கள் என்று குற்றம் சாட்டின.

ஆனால் துணைப் பிரதமர் அத்வானி, தீவிரவாதத்தை எதிர்க்க போடா அவசியம் தேவை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

என்னைப் பொறுத்தவரை போடா அநாவசியமான சட்டம். இந்த சட்டத்தை இதுவரை மாநில அரசுகள் தவறாகத்தான் பயன்படுத்தியுள்ளன என்று தோன்றுகிறது. இந்த சட்டத்தை நீதிமன்றங்களால் தூக்கி எறிய முடியாது. அரசே முன்வந்து விலக்கிக் கொள்ள வேண்டும். அது இப்பொழுதைக்கு நடக்காது. இந்த சட்டத்தின் தேவையின்மையை எதிர்க்கட்சிகள்தான் தீவிரமாக விளம்பரப் படுத்த வேண்டும். வாக்கெடுப்பின் போது வெளியேறுவது கையாலாகாத் தனத்தையே குறிக்கிறது.

3. கட்சித் தாவல் தடை சட்டத் திருத்தம்: மக்களவையில் இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலங்கள் அவையில் வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் இந்த சட்டம் அமலுக்கு வரும். இதன்படி சட்டமன்றங்கள், பாராளுமன்றத்தில் இடைக்காலத்தில் கட்சி மாறினால் அப்படி மாறுபவருக்கு பணம் கிடைக்கும் அரசியல் பதவிகளுக்கான வாய்ப்பு போய்விடும். அதாவது கட்சி மாறுபவருக்கு அமைச்சர் பதவியோ, வாரியத் தலைவர் பதவியோ இனிமேல் கிடைக்காது.

No comments:

Post a Comment