Sunday, December 07, 2003

குருமூர்த்தி - உலகப் பொருளாதாரம் பற்றி

குருமூர்த்தியின் 'பூகம்ப நிலையில் உலகப் பொருளாதாரம்!' பற்றி
துக்ளக் 10 டிசம்பர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 62ஆவது பகுதியிலிருந்து (சென்ற இதழின் அமெரிக்காவின் ஊதாரித்தனத்தால் வரும் விளைவுகள் பற்றிய தொடர்ச்சி)

* போன வாரம் அமெரிக்கா எப்படி இறக்குமதிகளையே நம்பி இருப்பதாலும் அவர்களது இறக்குமதி ஏற்றுமதியை விட மிக அதிகமாக இருப்பதாலும் மற்ற நாடுகளின் சேமிப்புகளை அமெரிக்கர்கள் அழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தோம் (இது குருமூர்த்தியின் கருத்து மட்டுமல்ல, அமெரிக்கப் பொருளாதார நிபுணர்கள் முதல் உலகனைத்தும் உள்ள அனைவரும் அறிந்துள்ளது.) இதன் விளைவுகள் என்ன?

* நடைமுறையில் இருக்கும் அமெரிக்கப் பொருளாதாரக் கொள்கை சேமிப்பினை ஆதரிக்காமல் செலவினை ஆதரிக்கிறது. வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் பணத்துக்கு மிகவும் குறைவான வட்டி, கடனுக்கு வாங்கும் பணத்திற்குக் குறைவான வட்டி, இறக்குமதியின் மூலம் நாட்டிற்குக் கொண்டுவரப்படும் பொருள்களில் விலை குறைவு, அரசாங்கம் அளிக்கும் சோஷியல் செக்யூரிட்டி மான்யங்கள் ஆகியவற்றினால் அமெரிக்கர்களுக்கு சேமிக்கும் எண்ணமே போய் விட்டது. அரசும் மக்கள் செலவு செய்ய செய்யத்தான் வியாபாரம் பெருகும் என்று எண்ணுகிறது.

* பல நாடுகளின் பொருளாதாரம் அமெரிக்காவிற்கு அவர்கள் அனுப்பும் ஏற்றுமதியில் உள்ளது. அமெரிக்கா தன் இறக்குமதியைக் குறைத்தால் உடனடியாக இந்நாடுகளின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். டாலரின் மதிப்பு வெகுவாகக் குறைந்தால் அல்லது அமெரிக்கப் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால், இந்தியப் பொருளாதாரமும் ஓரளவுக்கு பாதிக்கப்படும்.

* வாரன் பஃபெட் அமெரிக்கா இறக்குமதியைக் குறைக்காமல், அதே சமயம் ஏற்றுமதி-இறக்குமதிகளுக்கான ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தும் விதமாக 'இம்போர்ட் கிரெடிட் (IC)' என்னும் கருத்தை முன்வைத்துள்ளார். இதன்மூலம் ஏற்றுமதி செய்யும் வெளிநாடுகள் எப்படியாவது தங்களுக்குத் தேவையான அமெரிக்கப் பொருட்களை வாங்க முயற்சிக்க வேண்டும். அதுபோல அமெரிக்கர்களும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யக்கூடுமாறு புதிதாக எதையேனும் உருவாக்க முனைவார்கள். ஆனால் குருமூர்த்தி அமெரிக்கா தனது இறக்குமதியைக் குறைக்க முனைகிறது என்கிறார். அவ்வாறு இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை அமெரிக்கா இரும்பு/எஃகு ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கு விதித்திருக்கும் அதிக வரியைப் பற்றி அப்படிச் சொல்கிறார் போல. அதைக்கூட அமெரிக்கா விலக்கிக் கொள்ளப் போகிறதென்று தெரிகிறது.

குருமூர்த்தியின் முடிவான தொகுப்பு:

1. சேமிக்கும் நாடுகள் அமெரிக்கா போன்ற செலவழிக்கும் நாடுகளுக்குக் கடன் கொடுத்து தன்னுடைய பொருள்களை ஏற்றுமதி செய்து விற்பது; அதன் மூலம் முன்னுக்கு வரும் முறை இனிமேல் பலிக்காது.

2. செலவழிப்பதையே ஆதாரமாக வைத்து ஒரு நாடு பொருளாதாரத்தை வளர்க்க முடியாது.

3. மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து மாத்திரமே ஒரு நாடு நிரந்தரமான முறையில் வளர முடியாது.

இதுபற்றிய எனது கருத்துகளை வரும் நாட்களில் விளக்குகிறேன்.

முந்தையது: அமெரிக்காவின் ஊதாரித்தனம் பற்றி

No comments:

Post a Comment