Monday, December 15, 2003

துபே கொலை பற்றி மத்திய அரசின் தன்னிலை விளக்கம்

இன்று 'தி ஹிந்து' செய்தித்தாளில் மத்திய அரசின் தரைப் போக்குவரத்து அமைச்சரகமும், தேசிய நெடுஞ்சாலை வாரியமும் இணைந்து சத்யேந்திர துபே கொலை பற்றிய தன்னிலை விளக்கமாக ஒரு "விளம்பரச் செய்தியை" வெளியிட்டுள்ளன.

இதன் சாரம்:

* பிரதமர் அலுவலகத்துக்கு துபே எழுதிய கடிதம் வெளியானதன் மூலமாகத்தான் துபேயின் பெயர் வெளியே தெரிந்து அவர் கொல்லப்பட்டார் என்பது தவறான கருத்து. பிரதமர் அலுவலகத்துக்கு வந்த கடிதத்தின் நகல் நெடுஞ்சாலைத் துறையின் விஜிலன்ஸ் கமிஷனருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் அலுவலகம் துபேயின் கடிதத்தை வைத்துக் கொண்டு நேரிடையாக எந்தச் செயலிலும் ஈடுபட முடியாது. அதனை சம்பந்தப்பட்ட அமைச்சரகத்துக்கு அனுப்புவதே பிரதமர் அலுவலகத்தின் கடமையாகும். அவ்வாறு முழுத்தகவலையும் (பெயரும் சேர்த்து) தரைப் போக்குவரத்து அமைச்சரகத்திடம் அனுப்பியது ரகசியத்தை வெளியே சொல்வதாக ஆகாது.

* துபேயின் கடிதத்தின் பலனாக ஒரு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஒரு சில ஒப்பந்தக்காரர்களின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சாலை ஓரிடத்தில் மீண்டும் பாவப்பட்டது. துபே பிரதமருக்கு நேரிடையாகக் கடிதம் அனுப்பியது தவறு (?) என்றாலும் அவரை தண்டிக்காது, அவரது நேர்மையைப் பாராட்டி அவருக்கு பணி உயர்வும் கொடுக்கப்பட்டது.

* பீஹாரின் சட்டம் ஒழுங்கின்மையே இந்தக் கொலைக்குக் காரணம். இதுபற்றிப் பலமுறை அமைச்சர் கந்தூரி பீஹாரின் முதல்வர் ராப்ரி தேவிக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

* மற்ற எல்லாவிடங்களிலும் வேலை நன்கு நடந்து வருகிறது. ஆனால் பீஹாரில் மட்டும்தான் எல்லா வேலையிலும் நிறையத் தடங்கல் ஏற்பட்டுள்ளது (அட்டவணையைப் பார்க்க)

===

பீஹார் சட்டம் ஒழுங்கில்லாத மாநிலம் என்பது அனைவரும் ஓரளவுக்கு அறிந்ததே என்றாலும், இந்த அரசின் செய்தி விளம்பரம் மூலம் எல்லாக் கேள்விகளுக்கும் விடை கிடைத்ததாகத் தெரியவில்லை.

1. ஒரு கடிதத்தில் துபே தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று சொல்கிறார். "என் பெயர் வெளியில் தெரிந்ததனால் நான் தேவையற்ற பிரச்சினைகளுக்கும், மிரட்டல்களுக்கும் உள்ளாகியிருக்கிறேன்" என்கிறார். ஆனால் அவருக்கு சரியான பாதுகாப்பு கொடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

2. பீஹார் அரசுக்குப் பல கடிதங்கள் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார் தரைப் போக்குவரத்து அமைச்சர் கந்தூரி. ஆனால் நேற்று NDTV விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட பீஹார் சட்ட அமைச்சர் அதுமாதிரி ஒன்றும் வரவில்லை என்பது போலப் பேசினார். உண்மை என்ன? மத்திய அரசு ஏன் சும்மா இருக்கிறது? மத்தியப் படைகளின் (CRPF) மூலம் பாதுகாப்பு கொடுக்க முடியாதா?

3. துபே பெயர் குறிப்பிட்டு நான்கு ஒப்பந்தக்காரர்களை ஊழல் பேர்வழிகள் என்கிறார்: சென்டிரோடோர்ஸ்டோய் (ரஷ்யா), சைனா கோல் (சீனா), எல்ஜி (கொரியா) - இந்த மூன்று நிறுவனங்களும் அனுபவமும், திறமையும் இல்லாத உள்ளூர்க் காரர்களுடன் சேர்ந்து அவர்கள் மூலம் வேலைகளைச் செய்கின்றன, இந்த வேலைகள் தரமில்லாது இருக்கின்றன என்கிறார். பிராக்ரஸ்ஸிவ் கன்ஸ்டிரக்ஷன்ஸ் என்னும் நிறுவனம் சரியாகத் தொழிலை நிர்வகிக்கக் கூடியதில்லை என்று தான் கருதுவதாகச் சொல்கிறார். இந்த நான்கு நிறுவனங்களும் NH-2 (தில்லியையும், கொல்கத்தாவையும் இணைக்கும் பாதை) வில் வேலை செய்கின்றன. இந்த நான்கும் கூட்டாகவோ, தனியாகவோ துபே மீது கொலையாட்களை ஏவியிருக்கலாம். அதுபற்றி CBI விசாரணை செய்யும் என்றாலும், தேசிய நெடுஞ்சாலை வாரியம் அந்த ஒப்பந்தங்களை மீள்-ஆய்வு செய்யலாமே?

இன்னமும் கேள்விகள் நிறைய இருக்கின்றன.

சத்யேந்திர துபே பற்றிய என் பிற வலைப்பதிவுகள் ஒன்று | இரண்டு

No comments:

Post a Comment