Tuesday, December 23, 2003

ஹஜ் உதவித்தொகை பற்றிய மத்திய அரசின் நிலைப்பாடு

இதுநாள் வரையில் மத்திய அரசு ஹஜ் புனிதப் பயணம் செல்லவிருக்கும் முஸ்லிம்களுக்கு உதவித்தொகை வழங்கிக் கொண்டிருந்தது. இப்பொழுது இந்த ஹஜ் உதவித்தொகை கொடுப்பதற்கு மூன்று புதிய விதிகளை ஏற்படுத்தியுள்ளதாம். அவையாவன:

1. முதல்முறையாக ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கே இந்த உதவித்தொகை வழங்கப்படும்.
2. வருமான வரி செலுத்துபவர்களுக்கு இந்த உதவித்தொகை வ்ழங்கப்படாது.
3. உதவித்தொகை பெறுபவர்கள், ஹஜ் கமிட்டி அல்லது அரசு சொல்லும்/கொடுக்கும் இடங்களிலே மட்டும்தான் தங்க வேண்டும்.

இந்த விதிகளை எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தில் எதிர்த்துள்ளனர். பாஜகவின் முஸ்லிம் அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியும் நேரிடையாக எதிர்க்காமல், 2004ஆம் வருடத்திற்கு மட்டும் இந்த விதிகளைக் கடைபிடிக்க வேண்டாமே என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.

நான் இந்த ஹஜ் உதவித்தொகை வழங்குவதையே எதிர்க்கிறேன். அரசு இந்த மாதிரியான செயல்களில் ஈடுபடக் கூடாது. சமதா கட்சியின் ரகுநாத் ஜா, இந்துக்களுக்கும் அமர்நாத் யாத்திரை செய்ய உதவித்தொகை வழங்க வேண்டுமென்கிறார். அடுத்து கிறித்துவர்கள் வாடிகன் செல்ல, ஜெருசலம் செல்ல உதவித்தொகை கேட்பர். புத்த வழியினர், கயா செல்ல, கண்டி செல்ல உதவித்தொகை கேட்பர்.

கடவுள் நம்பிக்கை இல்லாதவர் லாஸ் வேகாஸ் சென்று சூதாட்டக் கிடங்கில் பணம் செலவழிக்க அடுத்து உதவித்தொகை கேட்கலாம். எனக்கு ஆஸ்திரேலியா போய் பாக்ஸிங் நாள் கிரிக்கெட் பார்க்க யாரும் உதவித்தொகை தருவதில்லை.

அவரவர் வருவாய்க்குள் அடங்குமாறு அவரவர் கடவுளை வழிபட்டுக் கொள்ளட்டும்.

ஆனால் இப்பொழுது ஹஜ் யாத்திரைக்கான உதவித்தொகையை உடனடியாக நிறுத்த முடியாது. இந்தப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாக்கப்பட்டு வெட்டு குத்தில் முடியும். ஆனால் நான்கைந்து வருடங்களுக்குள் இந்த உதவித்தொகை அளிப்பதை ஒட்டுமொத்தமாக நிறுத்தியே ஆக வேண்டும். முஸ்லிம்கள் தங்களுக்குள்ளாக ஒரு இயக்கத்தை ஏற்படுத்தி, பணம் வசூல் செய்து, அதன் மூலம் ஏழை முஸ்லிம்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கிக் கொள்ளட்டும்.

பின்குறிப்பு: பாலா சுப்ரா ஹஜ் உதவித்தொகை பற்றி பிறர் எழுதியுள்ள இரண்டு சுட்டிகளை அனுப்பியுள்ளார். உங்களுக்காக: அரவிந்த் லவாகரே, ரீடிஃப், 13 மார்ச் 2001 | சையத் சஹாபுத்தீன், தி மில்லி கெஸட், 15 செப்டம்பர் 2002

No comments:

Post a Comment