Friday, December 19, 2003

போடா வழக்கில் நெடுமாறனுக்கு ஜாமீன்

நெடுமாறனுக்கு 17 மாதங்களுக்குப் பின்னர் போடா வழக்கில் ஜாமீன் கிடைத்துள்ளது. நீதிபதிகள் "நாங்கள் முழுக் குற்றப் பத்திரிக்கையையும் படித்ததில் புகார் வெறும் நெடுமாறன் பேசியுள்ள பேச்சுக்கள் பற்றி மட்டுமே உள்ளது" என்று சொல்லியுள்ளனர். மேலும் 'தடை செய்யப்பட்ட புத்தகங்கள்' இவர்களிடமிருந்து கிடைத்தது அன்று குற்றம் சாட்டி விட்டு, அந்தப் புத்தகங்கள் யாவும் தமிழ்நாட்டில் அல்லது வேறு எந்த இடங்களிலும் தடை செய்யப்படவில்லை என்றும் அரசு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது! தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கு, அந்தத் தொடர்பு தீவிரவாதச் செயலைச் செய்யத் தூண்டுகோலாயிருந்திருக்கிறது என்று ஒரு நிரூபணமுமில்லை. ஆக சென்னை உயர்நீதிமன்றம் கிட்டத்தட்ட இந்த வழக்கு ஜோடனை செய்யப்பட்ட பொய் வழக்கு என்ற அளவிற்கு சற்று குறைவாக கருத்தைச் சொல்லி, நெடுமாறனுக்கு ஜாமீன் கொடுத்துள்ளது.

நெடுமாறன் மீதுள்ள வழக்கு போடா நீதிமன்றத்தில்தான் நடைபெற வேண்டும். உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் தலையிடாது, ஆனால் ஜாமீன் வழங்கி இந்த நீதிபதிகள் சொன்ன கருத்தை போடா நீதிமன்ற நீதிபதி கருத்தில் வைத்தல் வேண்டும். மேலும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் மனதில் வைக்க வேண்டும்.

இதர போடா பற்றிய செய்திகள்:

ஒரு மாநிலம் ஒருவர் மீது சாற்றியுள்ள போடா வழக்கினைத் தானாகவே திரும்பிப் பெற இயலாது, மத்திய அரசும் இசைந்தால்தான் அவ்வாறு செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு சொல்லியுள்ளது.

போடா சட்டத்திருத்தம் மாநிலங்கள் அவையிலும் வாக்கெடுப்பில் வென்றது. ஆனால் எதிர்க்கட்சிகள், போடாவை நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு, வெளிநடப்பு செய்தன.. இங்கு சுவாரசியமானது: சோ ராமசாமி மாநிலங்கள் அவையில் நியமன உறுப்பினர். இந்த சட்டத்திருத்தத்திற்கு எதிராக அஇஅதிமுக மட்டும்தான் மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் வாக்கெடுப்பில் வாக்களித்தன. மற்ற எதிர்க்கட்சிகள் இரண்டு அவைகளிலும் வெளிநடப்பு செய்தன. சோ எப்படி வாக்களித்தார் மாநிலங்கள் அவையில்? வாக்கெடுப்பின் போது மாநிலங்கள் அவையிலேயே இல்லையா? அல்லது ஆதரவாக வாக்களித்தாரா? இல்லை எதிர்ப்பெல்லாம் துக்ளக்கிலும், ஹிந்துஸ்தான் டைம்ஸில் எழுதுவதற்கு மட்டும்தானா?

மேலும் நேற்று அத்வானி மாநிலங்கள் அவையில் போடா சட்டம் (திருத்தத்துடன்) இருக்க வேண்டும் என்று ஆதரித்துப் பேசிய படத்துண்டு ஒன்று பார்த்தேன். அதில் "I agree that this (POTA) law is draconian" என்று கைகள் இரண்டையும் மடித்தவண்ணம் சொன்னார். "draconian" என்றால் மிகவும் கடினமான சட்டம். டிராகோ என்பவர் கிமு 7ஆம் நூற்றாண்டில் ஏதென்ஸ் நகரப் பாராளுமன்ற உறுப்பினர். இவர் இயற்றிய சட்டங்கள் எல்லாம், கிட்டத்தட்ட எந்தக் குற்றம் புரிந்தாலும் மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று கடைசியில் முடியும். காசைத் திருடினால் மரணம், அடுத்தவனைத் திட்டினால் மரணம்! இப்படிப்பட்ட சட்டமா ஒரு நாகரிகக் குடியாட்சி முறையில் வாழ விரும்பும் மக்களுக்குத் தேவை? அதை நாட்டின் துணைப்பிரதமர், உள்துறை அமைச்சர் ஒத்துக் கொள்ளவும் செய்கிறார்! ஒருவேளை அத்வானிக்கு "டிராகோனியன்" என்பதன் பொருள் முழுதாகப் புரியவில்லையோ, என்னவோ?

No comments:

Post a Comment