Sunday, December 14, 2003

சங்கம்: மாலன், நன்னனொடு சந்திப்பு

'தமிழ் உரைநடை எங்கே போகிறது?' என்னும் புத்தகத்தின் ஆசிரியர் பேரா.நன்னன் உடன் மாலன் இன்று சன் நியூஸில் உரையாடல் நிகழ்த்தினார். கடந்த ஓரிரு வாரங்களில் யாஹூ குழுமங்கள் ராயர்காபிகிளப், மரத்தடி ஆகியவற்றில் நடந்த விவாதங்களை மனதில் வைத்த மாதிரி இருந்தது இந்த உரையாடல். கிரிக்கெட் போட்டி வெகு சுவையானதாகப் போய்க்கொண்டிருந்ததால் அங்கும், இங்குமாக தொலை-இயக்கியைத் தட்டிக் கொண்டிருக்க வேண்டியதாயிற்று. எழுத்தில் தவறுகள் புகுவதை எப்படி தடுப்பது என்பது பற்றியது புத்தகம் என்று புரிந்தது. தவறான ஒருமை-பன்மை, உயர்திணை-அஃறிணை புழக்கம், சொற்களின் தவறான பொருள்கள் நாளடைவில் பயன்படுத்தப் படுவது (இறும்பூதுதல் என்ற சொல்லினை எடுத்துக்காட்டினார்), ஆங்கிலத்தில் சிந்தித்து தமிழாக்கம் செய்வதில் வரும் குழப்பங்கள் என்று சுவையாகச் சென்றது உரையாடல். [அங்கு இரண்டு பந்துகள் பார்ப்பேன், இங்கு ஒரு நிமிடம்...]

[தெரிந்து கொள்ள விழைபவருக்கு: இறும்பூதுதல் என்றால் ஆச்சரியப்படுதல். "நீங்கள் சட்டமன்றத் தேர்தலில் வென்றதை நினைத்து இறும்பூது எய்துகிறேன்" என்றால் "நீ எப்படிய்யா கெலிச்சே? தோத்துடுவேனில்ல நெனச்சேன்" என்று பொருள், ஜெயித்தவரைப் பாராட்டுவது அல்ல.]

ஆங்கில மொழித்தாக்கத்தால் இயல்பாக வினையைப் புழங்காமல், வினையெச்சத்தைப் பெயர்ச்சொல்லாக்கி அதன் கடைசியில் மற்றுமொரு வினையைப் போட்டுக் குழப்புவதைப் பற்றியும் நன்னன் பேசினார். ('பேசினார்' என்பதற்குப் பதில் 'பேச்சுவார்த்தை நடத்தினார்', 'புரிந்து கொண்டார்' என்பதற்குப் பதில் 'புரிதலைச் செய்தார்' ஆகிய பிரயோகங்கள்.)

மாலன் முடிக்கையில் தமிழ் மாநிலக் காங்கிரஸ், காங்கிரஸுடன் இணைந்தது என்பது தவறான பிரயோகம், 'ஒன்றானது' என்பதுதான் சரி என்று தான் எண்ணுகிறேன் என்றார். நன்னன் அதனை மேற்கொண்டு விளக்குகையில் 'இணைவது' என்பது தனியாக இருக்கும் இரண்டோ, அதற்கு மேற்பட்டதோ சேர்ந்தவாறு இருப்பது என்றும், அவை விரும்பும்போது பிரியலாம் என்றும், 'ஒன்றாவது' என்பது இரண்டறக் கலந்து விடுவது, புதிதாக ஒன்றை உருவாக்குவது என்றும் விளக்கினார். பாலும் தண்ணீரும் கலந்து தண்ணீர்ப்பால்; உளுந்து மாவும் அரிசி மாவும் கலந்து தோசை மாவு ஆகியவை ஒன்றாவது. ஐந்து விரல்களும் இணைந்து இருப்பது என்பது ஒன்றோடொன்று ஒட்டி நிற்பது.

தமிழில் பிழையின்றி எழுத விரும்புவோர் புத்தகத்தைத் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாங்கிப் படித்தபின் எழுதுகிறேன்.

மாலன் - மன்னர்மன்னன் சந்திப்பு

No comments:

Post a Comment