Friday, December 12, 2003

ஸீரோ நேர்மை

இன்று காலை தினமலரில் ஒரு செய்தி வந்திருந்தது. விளம்பரம், செய்தியாக வந்துள்ளது.

"இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக தமிழில் 'மின்-நாவல்' படைக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட்டில் டவுன்லோடு செய்து இந்த நாவலை முழுமையாகப் படிக்கலாம்.

பிரபல எழுத்தாளர் சாரு நிவேதிதா புதுமை முயற்சியாக 'ஸீரோ டிகிரி' என்ற இந்த மின்-நாவலை (இ-நாவல்) எழுதியுள்ளார். இன்டர்நெட்டில் http://shopping.chennaionline.com/zerodegree என்ற வெப்சைட் முகவரிக்கு போனால் 'கிளிக் டு பை தி புக்' என்று வரும். அங்கு 'கிளிக்' செய்தால் பெயர் மற்றும் வங்கி கார்டு எண் கேட்கும். அந்த விவரங்களை தந்த பிறகு முழு நாவலையும் டவுன் லோடு செய்து படிக்கலாம்.

இந்த தமிழ் நாவல் தான் இந்திய மொழிகளிலேயே படைக்கப்பட்டுள்ள முதலாவது 'மின்-நாவல்' ஆகும்.

இந்த மின்-நாவல் சென்னையில் நேற்று முன்தினம் துவக்கி வைக்கப் பட்டது."
முதலில் படித்தபோது 'என்னடா, இப்படிக் கதையடிக்கிறார்கள்' என்றுதான் தோன்றியது. நான் போன மாதம்தான் சுலேகா, தமிழோவியம் எல்லாம் போய் மின்-புத்தகமெல்லாம் வாங்கிவிட்டு அதைப்பற்றி வலைப்பதிவிலும் (1, 2), ராயர்காபிகிளப்பிலும் எழுதினேன், இதென்ன கரடி விடுகிறார்கள் இங்கே? 'உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக' என்று சன் டிவியில் வருமே (பின்னே கஸக்ஸ்தான் டிவிலயா கேவலமான தமிழ்ப்படத்த போடப்போறான்?) அதுமாதிரி இந்திய மொழிகளிலேயே முதன் முறையாக என்று ஆரம்பிக்கும்போதே ஒரு மாதிரி நெளிய வைத்தது. அதன் பிறகு சிந்தித்ததில், 'மின்-நாவல்' என்ற சொல் கண்ணில் பட்டது. சுலேகா, தமிழோவியம் ஆகியவிடங்களில் எல்லாம் சிறுகதைத் தொகுப்பு, அல்லது கட்டுரைகள் தான் இருந்தன, நாவல் இல்லை. ஒருவேளை அதைக் காரணம் காட்டி இந்தக் "கதையை" விடுகிறார்களா? என்றால் கொஞ்சம் தேடியதில் முழுப் பொன்னியின் செல்வனும் 'ஈ-புக்'காக வந்துள்ளது. என்னிடம் டிஸ்கியில் முழுப் பொ.செ மைக்ரோசாஃப்ட் வோர்டில் உள்ளது. எந்தப் புண்ணியவான் செய்தாரோ, தெரியாது, ஆனால் நிச்சயம் 'ஸீரோ டிகிரி' முதல் மின்-நாவல் கிடையாது.

தமிழோவியத்தில் பல நாட்களாகவே மூன்று நாவல்கள் மின்-புத்தகங்களாக வரப்போகின்றனவென்று சொல்லியிருக்கிறார்கள்.

மற்றபடி தமிழ் மின்-நூல்கள் என்றால் கவிதாசரண் பழைய இதழ்கள் எல்லாம் PDF கோப்புகளாகப் பல நாள்களாகக் கிடைத்த வண்ணம் உள்ளன. தீம்தரிகிட வும் இப்படி சந்தாதாரர்களுக்குக் கிடைக்கிறது என்று தகவல். நண்பர் பாரா அவரிடம் ஒரு தென்னமெரிக்கக்காரர் எழுதிய நாவலின் தமிழ் மொழியாக்கம் மின் வடிவில் இருக்கிறது, நாகூர் ரூமி கொடுத்தார் என்று சொன்னார் (எனக்கு இன்னமும் ஒரு பதிவு தரவில்லை).

ஆக, சாருவுக்கு எதற்கிந்த "இந்திய மொழிகளிலேயே முதலாவது" பட்டமெல்லாம்? ஏன் தினமலர் இந்த நேர்மை-தவறுதலுக்குத் துணை போகிறது?

பிற்சேர்க்கை: மின்-நூல்களாக கல்கியின் பொன்னியின் செல்வன் மற்றும் சிவகாமியின் சபதம், மதுரைத் திட்டத்தில் இலவசமாகக் கிடைக்கின்றன.

பொன்னியின் செல்வன்: பாகம் 1, அத்தியாயங்கள் 1-30, 31-57 | பாகம் 2, அத்தியாயங்கள் 1-26, 27-53 | பாகம் 3, அத்தியாயங்கள் 1-23, 24-46 | பாகம் 4, அத்தியாயங்கள் 1-23, 24-46 | பாகம் 5, அத்தியாயங்கள் 1-25, 26-50, 51-75, 76-91
சிவகாமியின் சபதம்: பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3

No comments:

Post a Comment