Wednesday, January 28, 2004

காந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 1

ராமச்சந்திர குஹா
ராமச்சந்திர குஹா
© IIM Calcutta
நேற்று சென்னை மேத்தமேடிகல் இன்ஸ்டிட்யூட்டில் ராமச்சந்திர குஹா "Multiple Careers of Mahatma Gandhi" என்னும் தலைப்பில் பேசினார்.

ஆரம்பத்தில் 'careers' என்று சொல்லி, பின்னர் 'calling' என்று மாற்றிக் கொண்டார். "மஹாத்மா காந்தியின் பலதுறைப் பங்களிப்பு" என்று மொழிமாற்றலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.

JC குமரப்பா
JC குமரப்பா
© The Hindu
குஹா வரலாற்றாளர், கிரிக்கெட் எழுத்தாளர், சூழலிய அறிஞர். காந்தியம் பற்றியும் வாசித்துக் கொண்டிருக்கிறார். காந்தியின் ஒருசில 'சீடர்கள்' மூலமாக காந்தியைப் பற்றித் தான் படிப்பதாகச் சொன்னார். காந்திக்குப் பல சீடர்கள் - அவர்களில் வெளியே அதிகமாகத் தெரியாத மூவர்: ஜே.சி.குமரப்பா (தமிழர்), வெர்ரியர் எல்வின், மீராபென் (இயற்பெயர் Madelene Slade). இந்த மூவர், நேரு, படேல், ஆசாத், ராஜாஜி மற்றும் பல சீடர்களின் மூலம் காந்தியின் பல்துறைப் பங்களிப்பை அறிந்து கொள்ள முடியும் என்றார்.

இருபதாம் நூற்றாண்டில் தலைசிறந்த மனிதர் காந்தியாகத்தான் இருக்க முடியும் என்றார் குஹா. டைம் இதழ் 1997இல் நடத்திய வாக்கெடுப்பில் ஐன்ஸ்டின் முதலாவதாகவும், காந்தி இரண்டாவதாகவும் வந்தனராம். ஆனால் ஐன்ஸ்டினே இதை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்றும், அவரே பலமுறை காந்தியே தலைசிறந்தவர் என்றும் சொல்லியுள்ளார் என்றார். ஐன்ஸ்டினுடைய அலுவலகத்தில் 1920களில் மூன்று படங்கள் மாட்டப்பட்டிருந்தனவாம். அவை முறையே ஃபாரடே, நியூடன், காந்தி ஆகியோருடையது. பின்னர் 1950களில் இரண்டு படங்களே இருந்தன - அவற்றில் ஒன்று காந்தியுடையது, மற்றொன்று ஒரு இசைக்கலைஞருடையது!

வெர்ரியர் எல்வின்
வெர்ரியர் எல்வின்
© Sunil Janah
காந்தியின் சீடர்கள் குமரப்பா, எல்வின், மீராபென் ஆகிய மூவருமே காந்தியிடன் பல வாக்குவாதங்களில் ஈடுபட்டுள்ளனர். அதில் மீராபெனின் வழக்கு விசித்திரமானது. மீராபென் பியானோ இசைக்கலைஞர். பீத்தோவனின் இசை மீது அளவுகடந்த ஈடுபாடுடையவர். நோபல் பரிசு பெற்ற ஃபிரெஞ்சு எழுத்தாளர் ரோமெய்ன் ரோலண்ட், பீத்தோவனைப் பற்றி எழுதியதை அறிந்து மேராபென் ரோலண்டைச் சந்திக்க வந்துள்ளார். அப்பொழுது ரோலண்ட் காந்தியைப் பற்றித் தான் எழுதிக் கொண்டிருந்த பிரதியைக் காண்பிக்க, அதைப்படித்த மேராபென்னுக்கு காந்தியின் மீது அளவு கடந்த ஈடுபாடு. உடனடியாக இந்தியா வந்து, நாளடைவில் தன் மெடலின் ஸ்லேட் என்ற பெயரை மீராபென் என்று மாற்றிக் கொண்டு, காந்தியின் ஆஸ்ரமத்தில் வசிக்க ஆரம்பித்து விட்டார். பிரித்வி சிங் ஆசாத் என்னும் முன்னாள் தீவிரவாதி (பகத் சிங் போன்றோரின் நண்பர்), பிரிட்டிஷ் அரசால் கொலை தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அந்தமான் ஜெயிலில் அடைக்கப்பட்டு, அங்கிருந்து நாக்பூர் ஜெயிலுக்கு மாற்றப்படும்போது, தப்பி ஓடித் தலைமறைவாக இருந்தவர், காந்தியின் ஆஸ்ரமத்தில் அவரிடம் சரணடைந்தாராம். மீராபெனுக்கு பிரித்வி சிங் ஆசாத் மீது காதல் பிறந்துள்ளது. ஆனால் ஆசாத்திடமிருந்து பதில் எதுவும் வரவில்லை. காந்திக்கு மீராபென்னுடைய காதல் பிடிக்கவில்லை. இதனால் மனமுடைந்த மீராபென் இமயமலைக்குச் சென்று அங்கு சுற்றுப்புறச் சூழலியல் பற்றி பல நாட்கள் வேலை செய்து வந்தாராம். வெர்ரியர் எல்வினும், காந்தியால் நம் நாட்டின் பழங்குடியினருடன் அறிமுகம் செய்யப்பட்டு, பிற்காலத்தில் இந்தியாவின் பழங்குடியினர் பற்றிய தலைசிறந்த அறிஞராக விளங்கியவர். குமரப்பா மட்டும் கடைசிவரை காந்தியுடனே இருந்திருக்கிறார். [இதையெல்லாம் குஹா ஏன் சொன்னார் என்று புரியவில்லை, ஆனால் கேட்க சுவாரசியமாக இருந்தது. முக்கியமாக மீராபெனின் காதல் கதை, பிரித்வி சிங் ஆசாதின் கதை ஆகியவை.]

2 comments:

  1. JC Kumarappa is one of the very 'unknown' person for tamilians and ironically he is a Tamilian !!!

    Gandhi developed his concept of gram swaraj after he got inspired by Kumarappa's thesis on Economy of permanence, which called for distributed wealth and a sustainable business eco-system in a synergistic environment.

    Kumarappa claims "cooperation" as the basis of economy of permanence and terms the normal business practices as "Economy of transience", where 'competition' is the basis !!!

    He was a very rare individual who led a austere life and lived in T.Kallupatty near madurai, towards the end of his life where he founded the Gandhi Niketan. This institution still exists and successfully runs schools, training programme on village industries etc.

    ReplyDelete