Saturday, January 17, 2004

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 5

பக்வான் சிங்
கடைசியாகப் பேசிய சென்னைப் பத்திரிகையாளர் யூனியனின் தலைவர் பக்வான் சிங் பல சுவாரசியமான தகவல்களை அளித்தார். இதுவரை நான் கேட்டேயிராதவை இவை. சட்டமன்றங்களுக்கும், பாராளுமன்றத்திற்கும் எப்படி உரிமைகள் கிடைத்துள்ளன, இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் உரிமைகள் ஆகியவை பற்றிப் பேசியபிறகு, உத்திரப் பிரதேசத்தில் (எந்த வருடம் என்று தெரியவில்லை) நடந்த கூத்து ஒன்றினைப் பற்றிச் சொன்னார். அந்த சட்டமன்றம் இரண்டு பத்திரிகை நிருபர்கள் மீது உரிமைப் பிரச்சினை என்னும் பெயரால் தண்டனை வழங்கியதாம். அதை எதிர்த்து அந்த இருவரும், ஒரு வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் பெயில் கேட்டுள்ளனர். உடனே சட்டமன்ரம் அந்த வழக்கறிஞர் மீதும் உரிமைப் பிரச்சினை எழுப்பி, தண்டனை அளித்ததாம். பெயில் வழங்கிய இரண்டு நீதிபதிகளையும் சிறையில் அடைக்கச் சொன்னதாம். நடுங்கிய நீதிபதிகள் இருவரும் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்குப் போனதும், அந்த நீதிமன்றத்தின் 28 நீதிபதிகளும் ஒன்றாக ஒரு அமர்வில் உட்கார்ந்து இந்த வழக்கினை எடுத்துக் கொண்டனராம். இதற்கிடையில் குடியரசுத் தலைவர் ஈடுபட்டதும், உத்திரப் பிரதேச சட்டமன்றம் கீழிறங்கியதாம்! இதைப்பற்றிய முழு விவரங்கள் யாரிடமாவது உள்ளதா?

மகாராஷ்டிர நீதிமன்றம் ஒரு நீதிபதி அடங்கிய விசாரணைக் கமிஷனை நியமித்து ஒரு மருத்துவமனையில் நடந்த குளறுபடிகளை விசாரிக்க உத்தரவிட்டதாம். விசாரித்த நீதிபதி, அந்த விவகாரத்தில் பல சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும், சுகாதார அமைச்சர் ஆகியோர் மீது தவறு என்று தன் அறிக்கையை சமர்ப்பித்தாராம். உடனே சட்டமன்றம் அந்த நீதிபதி சட்டமன்ற அவதூறு செய்தார் என்று அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதாம்!! இதுவும் பின்னர் மேலிடத் தலையீட்டால் நின்றுபோனதாம்! இது பற்றியும் எனக்குத் தகவல்கள் தேவை. [இதையெல்லாம் பார்க்கும்போது தமிழக சட்டமன்றம் செய்தது வெறும் ஜுஜுபி என்றே தோன்றுகிறது!]

ஆஸ்திரேயாவில் நடைபெற்ற ஒரு உரிமைப் பிரச்சினை வழக்கைப் பற்றிப் பேசிய பக்வான் சிங், ஆஸ்திரேலியா ICCPR (International Covenant on Civil and Political Rights) என்னும் சர்வதேசச் சட்டத்துக்கு 1978இலிருந்து உடன்படுவதாகச் சொல்லியிருந்தனர். அங்கு பாராளுமன்றத்தில் இரண்டு பத்திரிகை நிருபர்கள் மீது ஒரு உரிமை மீறல் பிரச்சினை எழுந்துள்ளது. அதில் ஒரு கமிட்டி விசாரணை செய்து அவ்விருவருக்கும் தண்டனை வழங்கியதாம். உடனே அந்த இருவரும் சர்வதேச நீதிமன்றத்தில் வழக்காடி, தங்களை விசாரணை செய்த கமிஷனில் உள்ள இரண்டு உறுப்பினர்கள் தங்கள் மீது பிரச்சினையை எழுப்பியவர்கள், ஆகவே அவர்களை உள்ளடக்கிய ஒரு கமிஷனிடமிருந்து தங்களுக்கு நியாயம் கிடைக்காது என்று முறையிட, சர்வதேச நீதிமன்றமும் அதை ஒத்துக் கொண்டு, அவர்கள் மீதான தண்டனையை ரத்து செய்ததாம்.

ஆனால் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பப்படும் உரிமைப் பிரச்சினையில் முறையிடும் கட்சியின் உறுப்பினர்களே விசாரணை செய்து தண்டனை கொடுக்கும் குழுவிலும் உள்ளனர். இதனால் எப்படி நியாயம் கிடைக்கும் என்ற கேள்வியை எழுப்பினார். மேலும் முதலமைச்சரின் தோண்டர்கள் (அமைச்சர்கள் மற்றும் இதர அடிப்பொடியினர்) தன் தலைவருக்கு யார்மீது கோபம் உள்ளதோ, அவர்களை நிர்மூலம் செய்வதன் மூலமே தலைவரின் அன்பைப் பெறமுடியும் என்ர வகையில் செயல்படுகின்றனர் என்றார்.

இதன் பிறகு கேள்வி பதில்கள் தொடர்ந்தன. ஒரு கேள்விக்குப் பதில் சொல்லும்போது நீதிபதி தாமஸ், புகழ்பெற்ற Searchlight வழக்கு நடந்தபோது உத்திரப் பிரதேச சட்டமன்றத்தில் (மேல் சொன்னப்பட்ட) நிகழ்ந்த கூத்து நடந்திருக்கவில்லை. அப்போழுதைய பெரும்பான்மைத் தீர்ப்பில், சட்டமன்றங்களின் உரிமைகள் அதிகமானது என்ற தீர்ப்பே வெளியானது. அப்பொழுதே நீதிபதி சுப்பாராவ் அதனை எதிர்த்து சிறுபான்மைத் தீர்ப்பை வழங்கியிருந்தார். தற்போதைய வழக்கு Searchlight வழக்கின்போது இருந்த பெஞ்சை விடப் பெரிய பெஞ்சினால் விசாரிக்கப்பட்டு, இந்தக் குழப்பங்களுக்கெல்லாம் ஒரு தீர்வு கிடைக்கலாம் என்றார்.

இது மாதிரியான கூட்டங்கள் மூலம் பொதுமக்களுக்கு உள்ள உரிமைகள், பத்திரிகைகளுக்குள்ள உரிமைகள், மற்றும் சட்டமன்ற, பாராளுமன்ற அதிகார துஷ்பிரயோகங்கள் வெளியாகும். இதுபோன்ற அடுத்த கூட்டம் மும்பையில் நடக்கப்போகிறதாம்.

No comments:

Post a Comment