Saturday, January 17, 2004

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 2

என். ராம்
அடுத்ததாகப் பேசிய 'தி ஹிந்து' என்.ராம், சம்பவம் நடந்த அன்று நிகழ்ந்தவைகளைப் பற்றி சிறிது விளக்கி விட்டு, தம் செய்தித்தாள் பிரச்சினை தொடர்பானவைகளைப் பற்றித் தான் பேசப்போவதில்லை என்றும், இந்த வழக்கு நீதிமன்றத்திடம் உள்ளது என்றும் சொன்னார். முக்கியமாக உரிமைப் பிரச்சினை வழக்கிலிருந்து விடுபடுவது சிறிய நோக்கு என்றும் அதை விடுத்து, தாம் விரும்புவது இந்த சட்டமன்றங்களின் உரிமைப் பிரச்சினையை ஒட்டுமொத்தமாகப் புரிந்து கொண்டு உச்ச நீதிமன்றம் வழியாக பத்திரிகை சுதந்திரம் எதுவரையில் செல்லுபடியாகும், சட்டமன்றங்களின் எம்மாதிரி நிகழ்வுகளை பத்திரிகைகள் எழுத முடியும், எதிர்க்க முடியும், விமரிசிக்க முடியும் என்ற கேள்விகளுக்கு விடை காண்பதே முக்கியமான நோக்கு என்றார். தமிழக அரசு தன் வழக்கறிஞர் மூலம் 'தி ஹிந்து' ஊழியர்கள் சட்டமன்றத்தின் ஏகாதிபத்தியத்தையும், கம்பீரத்தையும் ("Supremacy and majescticity of the legislature") ஒத்துக்கொண்டால் வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக சொன்னதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றார். இந்தியாவில் அரசியல் நிர்ணயச் சட்டமே தலையானது. அந்த அரசியல் நிர்ணயச் சட்டத்தை நிர்வகிப்பது நீதிமன்றங்களே. சட்டமன்றங்களும் அரசியல் நிர்ணயச் சட்டம், நீதிமன்றங்களின் தீர்ப்புகள் ஆகியவற்றுக்கு உடன்பட்டே ஆக வேண்டும் என்றார்.

தன் நிறுவனம் உச்ச நீதிமன்றத்திடம் தடையுத்தரவை வாங்கிய பின்னர், தமிழக முதல்வர் ஜெயலலிதா 'தமது அரசு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உடன்படும்' என்று ஒத்துக் கொண்டதன் வழியே, தனது அரசும், சட்டமன்றமும் உச்ச நீதிமன்றத்துக்குக் கீழ்ப்படிகிறது என்பதை தெரிந்தோ, தெரியாமலோ ஒத்துக் கொண்டுவிட்டார் என்றார்.

சோ
அடுத்துப் பேசிய சோ, அரங்கையே குபீர் குபீர் என சிரிக்க வைத்தார். "என்.ராம் முதல்வரின் (கவனிக்கவும்... சட்டமன்றம் அல்ல) ஏகாதிபத்தியத்தையும், கம்பீரத்தையும் ஒத்துக் கொண்டிருந்தால் எந்தப் பிரச்சினையும் வந்திருக்காது' என்று ஆரம்பித்த சோ, சட்டமன்றங்கள், பாராளுமன்றம் ஆகியவற்றுக்கு எந்தத் தனி உரிமையும் இருக்கக் கூடாது என்பதே தன் கொள்கை என்றார். இவர்களுக்கென தனியாக உரிமை கொடுக்கும் சட்டம் இயற்றப்பட்டால், அதை நிச்சயமாக துஷ்பிரயோகம் செய்வார்கள், எனவே தனி உரிமைகள் எதுவும் இல்லாமல் இருப்பதே நியாயம் என்றார். தன் மீதும் இருமுறை உரிமை மீறல் பிரச்சினை எழுப்பப்பட்டது என்றும் இருமுறையும் தான் நேரில் ஆஜராகும் முன்னர் அந்த சட்டமன்றங்கள் கலைக்கப்பட்டன என்றும் இதனால் தற்போதைய முதல்வருக்கு செய்தி போய்ச் சேர்ந்துவிட்டது என்றும் இனியும் இவரை உரிமைமீறல் என்று அழைத்து தன்னாட்சிக்கு பங்கம் விளைவித்துக் கொள்ளக் கூடாது என்று தன் பக்க்கமே வருவதில்லை என்றும் விளையாட்டாகக் குறிப்பிட்டார். [முதல் முறையாக சோ மீது உரிமை மீறல் பிரச்சினை எழுந்தது துக்ளக்கில் ஒரு கேலிச்சித்திரத்தில் சட்டமன்றத்தில் எழுப்பப்படும் சத்தங்கள் கழுதைகள் கத்துவது போல் உள்ளது என்று வந்திருந்ததனால். மன்னிப்பு கேட்கச் சொல்லும் போது சோ, தான் மன்னிப்பு கேட்கவேண்டுமானால் அது அந்தக் கழுதைகளிடம்தான் என்று சொன்னாராம்.]

கேலியாக மற்றுமொரு ஆழமான விவாதத்தையும் முன்வைத்தார். "சட்டமன்றங்களின் அவைத்தலைவருக்கு, உறுப்பினர்கள் பேசியவை ஒருசிலவற்றை நீக்கும் அதிகாரம் (expunge) உண்டு. அப்படி நீக்கப்பட்டவைகளை ஊடகங்கள் வெளியிட முடியாது. அப்படி வெளியிட்டால், அந்த ஊடகம் சட்டமன்றத்தின் உரிமையை மீறியதாகும். ஆனால் எப்பொழுது ஒன்று அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறதோ, அப்பொழுதே அந்தச் சொற்கள்/செயல்கள் சட்டமன்றத்தில் நடக்கவில்லை என்றாகி விடுகிறது. அப்படியானால் அதை ஊடகங்கள் வெளிப்படுத்தும்போது ஒரு சட்டமன்றத்திற்கு அந்தச் சொல்லை/செயலை வெளிப்படுத்திய ஊடகத்தின் மீது நடவடிக்கை எடுக்க என்ன அதிகாரம் இருக்க முடியும்?"

பத்திரிகைகளுக்கு என்று தனியாக எந்த உரிமைகளும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஒரு தனிக் குடிமகனுக்கு இருக்கும் உரிமைகளே போதுமென்றும் தன் உரையை முடித்தார்.

No comments:

Post a Comment