Monday, January 26, 2004

நடுங்க வைக்கும் சாலை விபத்துகள்

நேற்று சென்னையிலிருந்து நெய்வேலிக்கு எனது காரிலேயே போய்விட்டு வந்தோம். வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றது எனது ஓட்டுனர்; கார் ஓட்டுவதில் நல்ல தேர்ச்சி பெற்றவர். காலையில் போகும்போது கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்றோம். இரவு திரும்பும்போது திண்டிவனம் வழியாக வரத் தீர்மானித்திருந்தோம். ஆனால் திண்டிவனத்தைத் தாண்டி வருகையில் நெடுஞ்சாலையில் ஒரு விபத்தினால் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்டிருந்தது. அதனால் பின்னோக்கி திண்டிவனம் வந்து, அங்கிருந்து பாண்டிச்சேரி வந்து மீண்டும் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாகவே வீடு வந்து சேர்ந்தோம். எங்களுக்குப் பின்னர் கிளம்பி வரவிருந்த நண்பர்களிடத்தில் திண்டிவனம் வழி வராமல் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியே வருமாறு தொலைபேசியில் தகவல் கொடுத்தோம்.

வழியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் நான்கு விபத்துகள் (ஏற்கனவே நிகழ்ந்திருந்தன) கண்ணில் பட்டது. இரண்டில் சிறு கார் (மாருதி) மீது சற்றே பெரிய வண்டி மோதி கார் அப்பளம் போல் நொறுங்கிக் கிடந்தது. தெருவெங்கும் கண்ணாடிச் சிதறல்கள். மற்றும் இரண்டு விபத்துகளில் இரண்டு சக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்களின் அடியில் மாட்டிக் கொண்டிருந்தன.

இந்த ஐந்து விபத்துகளிலும் பலர் மரணமடைந்திருக்கக்கூடும். ஆனால் இன்று ராகவன் தொலைபேசியில் அழைத்து நேற்று திண்டிவனத்தில் சாலையில் நான் பார்த்த விபத்தில் மரணமடைந்தது ஐகாரஸ் பிரகாஷின் நெருங்கிய உறவினர்கள் என்றும், இன்றுதான் விஷயம் தெரிந்து பிரகாஷ் திண்டிவனம் சென்றுள்ளார் என்றும் சொன்னபோது மிகவும் வருத்தமாக இருந்தது. பிரகாஷும் மற்ற நண்பர்களும் அந்த வழியாகத்தான் நேற்றி இரவு சென்னைக்குப் போயிருக்கிறார்கள். அப்பொழுது பிரகாஷுக்குத் தெரிந்திருக்கவில்லை.

இப்பொழுது நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துகள் அதிகமாயிருக்கின்றன. போகும் வழியெங்கும் எதிரே வரும் வண்டிகளின் முகப்பு விளக்குகள் high beam என்று கண்ணைக் கூசுமளவிற்கான பிரகாசத்திலேயே இருக்கின்றன. ஓட்டுனர்கள் high beamஇலிருந்து low beamக்கு மாற்றிக் கொள்வதில்லை. கிழக்குக் கடற்கரைச் சாலை போன்றவை நன்கு போடப்பட்டுள்ளதால் நான்கு சக்கர வண்டிகள் 100கிமி/மணி வேகத்திற்கு மேலும் செல்வதால் ஒரு கட்டுப்பாட்டிற்குள் வண்டிகளை வைத்துக் கொள்ள முடிவதில்லை. இந்தச் சாலைகளில் அதிகபட்ச வேக அளவு ஏதும் இருப்பதாகவும் தெரிவதில்லை. அப்படியிருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த வைக்க நெடுஞ்சாலைக் காவல்துறை ஏதும் இருப்பதாகவும் தெரிவதில்லை.

எனக்கு இந்தச் சாலைகளில் இரவு நேரங்களில் காரில் பயணம் செய்ய மிகவும் நடுக்கமாயிருக்கிறது.

இன்னமும் எத்தனை உயிர்கள் போக வேண்டுமோ?

No comments:

Post a Comment