Sunday, January 18, 2004

இந்தியா ஆஸ்திரேலியா ஒருநாள் போட்டி

கிரிக்கெட் பற்றி எழுதக்கூடாது என்று நிலையிலிருந்து சிறிது மாற எண்ணம். இனி, இந்தியா விளையாடும் ஆட்டங்களை, நான் பார்க்க நேரிடும்போது, அவற்றைப் பற்றிய என் எண்ணங்களைப் பதிக்கவிருக்கிறேன்.

இன்று விபி தொடரின் ஐந்தாவது போட்டி, இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நடந்தது. இந்திய அணியில் சேவாக் இடம்பெறவில்லை. டாஸில் வென்ற கங்குலி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தார். பகலிரவுப் போட்டிகளில் வேறு எந்த முடிவையும் எடுப்பது இந்நாட்களில் உசிதமல்ல.

கங்குலி-டெண்டுல்கர் ஜோடி, பல நாள்களுக்குப் பிறகு ஆட்டத்தைத் துவங்கியது. எழும்பி வந்த ஒரு பந்தை சமாளிக்க முடியாமல் கங்குலி வில்லியம்ஸின் பந்து வீச்சில், அவரிடமே பிடி கொடுத்து ஆட்டத்தை இழந்தார். அதற்கு முன்னரேயே, கங்குலியின் கேட்சை மார்ட்டின் ஸ்லிப்பில் கோட்டை விட்டிருந்தார். கங்குலியைத் தொடர்ந்து விளையாட வந்த லக்ஷ்மண், டெண்டுல்கருடன் இணைந்து 110 ஓட்டங்கள் எடுத்தார். கில்லஸ்பி, வில்லியம்ஸ் இருவரும் நன்கு பந்து வீசினர். ஆனால் தொடர்ந்து பந்து வீச வந்த பிரெட் லீயை டெண்டுல்கரும், லக்ஷ்மணும் கைமா செய்து விட்டனர். மூன்று ஓவர்களின் ஆறு நான்குகள் கொடுத்த லீயின் பந்து வீச்சு அந்த நேரத்தில் 3-0-30-0 என்று இருந்தது. டெண்டுல்கர் 40களில் இருக்கும்போது பந்தினைக் கால்திசையில் திருப்பி ஆடும்போது குதிகால் பிசகி விட்டது. வலியுடனேயே கடைசிவரை விளையாடிக் கொண்டிருந்தார். மாற்று ஓட்டக்காரராக கங்குலியை மட்டுமே பெறமுடியும் என்ற நிலையில் (ஒரு இன்னிங்க்ஸில் ஆட்டமிழந்த வீரர்களே ரன்னராக வரமுடியும்.) டெண்டுல்கர் அதற்கு கால்வலியுடன் ஓடுவதே விவேகமானது என்று எண்ணியிருக்கலாம்!

நொண்டிக்கால் டெண்டுல்கரும், சாதாரணமாகவே மெதுவாக ஓடும் லக்ஷ்மணும், எங்கெல்லாம் மூன்று ஓட்டங்கள் எடுக்க முடியுமோ, அங்கு இரண்டும், எங்கு இரண்டு கிடைக்குமோ, அங்கு ஒன்றும், ஒன்று எடுக்கக்கூடிய ஒருசில இடங்களில் ஒன்றுமில்லாமலும் ஓட்டம் எடுத்தனர். அப்படியும், ஆஸ்திரேலியப் பந்து வீச்சாளர்கள் வெகு சாதாரணமாகப் பந்து வீசி, ஓவருக்கு ஐந்திலிருந்து ஆறு ஓட்டங்களை சுலபமாக வழங்கி வந்தனர். ஒரு கட்டத்தில் ஓட்டங்கள் அனைத்தும் கால் திசையிலேயே வந்து கொண்டிருந்தன. கிட்டத்தட்ட ஐந்து ரன்-அவுட் வாய்ப்புகள் ஆஸ்திரேலிய வீரர்களால் நழுவ விடப்பட்டது. இந்திய அணி பந்து வீசிய போது யுவ்ராஜ் சிங்கும் பதிலுக்கு மரியாதை நிமித்தமாக நாலைந்து ரன்-அவுட் வாய்ப்புகளை நழுவ விட்டார். இப்படி சற்றே தூக்கம் வரவழைக்குமாறு விளையாட்டு போய்க்கொண்டிருந்தபோது ஆட்டத்தின் ஓட்டத்துக்குப் புறம்பாக, சதம் எளிதாகக் கிடைக்கும் வாய்ப்பிருந்தும், டெண்டுல்கர் சைமாண்ட்ஸின் பந்து வீச்சில் பந்துவீச்சாளருக்கே சுலபமாகக் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

உள்ளே வந்த ராஹுல் திராவிட் ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிக்கே லாயக்கில்லாதவர் என்று பெயரெடுத்தவர். இன்று வந்தது முதற்கொண்டே அருமையாக விளையாடினார். லக்ஷ்மண் தன் பாத்திரத்தைப் புரிந்து கொண்டு, ஒத்து ஊதுபவராகவே கடைசிவரை இருந்தார். இந்தக் கூட்டணி வெறும் 20 ஓவர்களில் 133 ஓட்டங்களைப் பெற்று, ஆட்டத்தை இந்திய அணியின் பக்கம் திருப்பியது. 48ஆவது ஓவரில் ஓட்டங்களை அதிகரிக்க, திராவிட், ஹார்வேயின் பந்துகளைத் தூக்கி அடிக்க ஆரம்பித்தார். அந்த ஓவரின் மூன்றாவது, நான்காவது பந்துகள் மிட்விக்கெட் திசையில் தூக்கி அடிக்கப்பட்டு நான்கு ரன்களுக்குப் பறந்தன. அதற்கடுத்த பந்தினை மிட்-ஆன் திசையில் மேலே அடிக்க, அங்கு எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார் திராவிட். 50ஆவது ஓவரின் கடைசிப் பந்தை மிட்-ஆன் மேல் தூக்கி அடித்து நான்கு ஓட்டங்களைப் பெற்ற லக்ஷ்மண் தன் சதத்தையும், அணியின் முன்னூறையும் கொண்டு வந்தார்.

இதுதான் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி முதல்முறையாக 300 ஓட்டங்களைத் தாண்டுவது. பிரிஸ்பேனில் நடந்திருக்கும் ஒருநாள் போட்டிகளிலேயே இதுதான் ஒரு அணி பெறும் அதிக ஓட்டங்களாகும்.

ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்திலிருந்தே வெறி கொண்டவர்கள் போல ஆட ஆரம்பித்தனர். கில்கிறிஸ்டும், ஹேய்டனும் ஒவ்வொரு பந்துக்கும் மட்டையைச் சுழற்றினர். முதல் நான்கு ஓவர்களில் 8, 9, 12, 9 ஓட்டங்கள் முறையே வந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் இறங்கி வந்து மட்டையைச் சுழற்றி அடித்தனர். ஆனால் இர்பான் பதானும், ஆஷிஸ் நேஹ்ராவும் பயந்து நடுங்காமல் பந்து வீச்சை திறம்படவே செய்தனர். ஆறாவது ஓவரில் கில்கிறிஸ்ட் பதான் வீசிய பந்தை உயரத் தூக்கி அடிக்க, மிட்-ஆனில் பாலாஜி நன்கு கேட்ச் பிடித்தார். உள்ளே வந்த பாண்டிங் தயங்கித் தயங்கியே விளையாடினார். பின்னர், பாலாஜி வீசிய பந்தை மிட்விக்கெட் திசையில் அடிக்கப்போக, விளிம்பில் பட்ட பந்து வானளாவ சென்று ஸ்லிப்பில் லக்ஷ்மணிடம் கேட்சாகிப் போனது. ஆஃப் ஸ்டும்புக்கு வெகு வெளியே வீசப்பட்ட பாலாஜியின் பந்தை மட்டையால் வெட்டி அடித்த மார்ட்டின், அந்தப் பந்து பாயிண்டில் இருந்த யுவ்ராஜ் சிங்கின் கைக்குள் மாட்டியது. ரோஹன் காவஸ்கரின் முதல் ஓவரில் சைமாண்ட்ஸ் பந்துவீச்சாளருக்கே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 141/4 என்ற நிலையில் மைக்கேல் கிளார்க், மாத்தியூ ஹேய்டனுடன் சேர்ந்து விளையாட வந்தார். ஹேய்டனும் தன் ஆட்டத்தை சற்றே நிதானமாக்கி சதத்தைத் தாண்டினார்.

ஹேய்டன் இப்படியே போனால் தாங்காது என நினைத்த கங்குலி பதானைப் பந்து வீச்சிற்கு மீண்டும் அழைத்தார். முதல் பந்தை ஹேய்டன் உயரத் தூக்கி அடிக்க, பாலாஜி கையில் விழுந்த கேட்சை மிட்விக்கெட்டில் எல்லைக்கோட்டுக்கருகே நழுவ விட்டார். ஆனால் அதிகம் சேதமாகாமல், மூன்றாவது பந்தில் ஹேய்டன் விக்கெட் கீப்பர் திராவிடிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு ஆஸ்திரேலியாவிடம் ஜெயிக்கப் போதுமான பலம் இல்லை. பாலாஜியும், பதானும் ஆட்டம் முழுமைக்குமே அருமையாகப் பந்து வீசினர். இதில் பதான் இந்தியாவிற்குக் கிடைத்திருக்கும் மிக முக்கியமான சொத்து.

ஆட்ட நாயகானாக லக்ஷ்மண் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் திராவிடுக்கே இந்த விருது போய்ச் சேர்ந்திருக்க வேண்டும்.

ஸ்கோர்போர்டு

No comments:

Post a Comment