Wednesday, January 28, 2004

காந்தியின் பலதுறைப் பங்களிப்பு - 2

பகுதி ஒன்று

எதை வைத்து காந்தி இருபதாம் நூற்றாண்டின் தலை சிறந்த மனிதர் என்று சொல்வது?

சாதாரண மனிதர்கள் ஒரு துறையில் பங்களிக்கவே கஷ்டப்படும்போது காந்தி நான்கு துறைகளில் வெகு முக்கியப் பங்களித்திருக்கிறார். அவையாவன:
1. இந்திய விடுதலை இயக்கம்
2. தீண்டாமை ஒழிப்பு
3. மத நல்லிணக்கம் - இந்து/முஸ்லிம்/கிறித்துவ/சீக்கிய நல்லுறவு
4. பொருளாதாரம் (சுற்றுப்புறச் சூழல் சார்ந்த தொழில்நுட்பத் தேர்வு)

இப்படி மேற்சொன்ன நான்கு துறைகளிலும் கூட காந்தி ஏற்கனவே மற்றவர்கள் செய்ததை அடியொட்டிச் செய்யவில்லை. புதுமை ஒன்றைக் கொண்டு வந்தார்.

விடுதலை இயக்கம் == சத்தியாக்கிரஹம் (அமைதிவழிப் போராட்டம்)
தீண்டாமை ஒழிப்பு == கோவில் பிரவேசம்
மத நல்லிணக்கம் == கூட்டுப் பிரார்த்தனை
பொருளாதாரம் == கிராம ஸ்வராஜ்யம்

இப்படி ஒவ்வொரு துறையிலும் கொண்டுவந்த புதுமை அனைவருக்கும் ஏற்புடையதாக இல்லை. இடம், வலம் என்று இரு கோடியில் உள்ளவர்களும் காந்தியின் மேல் கடும் கோபம் கொண்டனர். விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டுவந்த தீவிரவாதிகளுக்கும் காந்தியின் மேல் கோபம் (அஹிம்சை என்று போரடிக்கிறார் என்று), இங்கிலாந்தின் அரசி/அரசர் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் எப்படியாவது நமக்கு விடுதலைப் பிச்சை போட்டு விடுவார்கள் என்று கருத்துக் கொண்டிருந்தவர்களுக்கும் கோபம் (தெருவில் போய்ப் போராடச் சொல்கிறார் என்று). தீண்டாமை ஒழிப்பில் காந்தியின் கொள்கைகள் மீதும் இரு பக்கத்திலிருந்தும் கோபம்: அம்பேத்கார் தலைமையில் தலித்துகளுக்கு காந்தி செய்வது போதாது என்று கோபம். சாதி இந்துக்களுக்கு காந்தி தீண்டாமையை ஒழிக்க விழைகிறார் என்று கோபம். 'கோவில் பிரவேசம்' என்னும் திட்டத்தை காந்தி முன்வைத்தபோது சங்கராச்சாரியார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இங்கிலாந்து அரசுக்கு ஒரு மனு அனுப்பினராம் - "காந்தி ஒரு ஹிந்துவே அல்ல" என்று. மத நல்லிணக்கம் பற்றி காந்தி பேசும்போது இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அவர்மீது கோபம், மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத மதச்சார்பற்ற நேரு போன்றவர்கள் காந்தியின் கூட்டுப் பிரார்த்தனை மீது நம்பிக்கை வைக்கவில்லை. பொருளாதாரம் பற்றிய விஷயத்திலும் நேரு போன்றவர்கள் பெரிய தொழிற்சாலைகள், பெரிய நீர்த்தேக்கங்கள் என்று நாட்டை பெருந்தொழில் மயமாக்குதலையே விரும்பினர்.

இன்றுவரையிலும் காந்தியின் கொள்கைகள் பற்றிய விவாதங்கள் நடந்துகொண்டிருக்கிறது. காந்தியின் மீது இன்றும் வெறுப்பு தூவப்படுகிறது. நாட்டின் பிளவுக்கு காந்தி மட்டுமே காரணம் என்பதுபோல் பேசப்படுகிறது. காந்தி தீண்டாமையை ஒழிக்க அதிகமாக எதுவும் செய்யவில்லை என்கிறோம். அவருக்குப் பின் அடையாளம் காட்டக்கூடிய அளவில் வேறு யாராவது தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டுள்ளனரா? அம்பேத்கார் தலித் இனத்தின் உள்ளேயிருந்து தீண்டாமையை ஒழிக்கப் பாடுபட்டார். காந்தி சாதி ஹிந்துவாக இருந்து தீண்டாமை ஒழிப்பில் ஈடுபட்டார். இரண்டும் தேவையாக இருந்தது. மத நல்லிணக்கத்திலும் காந்தியின் கொள்கைகள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காந்தி ஒவ்வொரு மதத்தவரும் தன் மதத்திற்கு அடுத்தவரை மாறும்படிச் செய்வதை விரும்பவில்லை. அவர் மதமாற்றத்தை எதிர்த்தார். ஒரு ஹிந்து தன் கிறித்துவ நண்பனை நல்ல கிறித்துவனாக மாற்றுவதும், ஒரு கிறித்துவன் தன் ஹிந்து நண்பனை இன்னமும் நல்ல ஹிந்துவாக மாற்றுவதுமே சரியான முயற்சி என்று எண்ணினார். இன்றோ, ஆர்.எஸ்.எஸ்காரர்கள் காந்தியின் ஒருசில மேற்கோள்களை மதமாற்றத்துக்கு, அதன் மூலம், சிறுபான்மையினருக்கு எதிராகவும், அஹிம்சைக்கே எதிராகவும் பயன்படுத்துகின்றனர். இதனைக் கண்டிக்க வேண்டியது நம் கடமை. காந்தியின் நெருக்கமான நண்பர் CF ஆண்டிரூஸ் (CF Andrews), ஒரு தீவிர கிறித்துவர்.

முடிக்கும்போது குஹா "இந்தியாவின் தலைசிறந்த மனிதராக விளங்கியவர் புத்தர். அவருக்குப் பின்னர் என்றால் அது மஹாத்மா காந்தியே. நாம் புத்தரையும் அவரது கொள்கைகளையும் நாட்டைவிட்டே விரட்டிவிட்டோம். காந்தியையும் அப்படியே விரட்டிவிடுவோமா?" என்ற கேள்வியுடன் முடித்தார்.

நாம் என்ன செய்யப்போகிறோம்?

சுட்டிகள்:
* ராமச்சந்திர குஹாவின் "Savaging the Civilized; Verrier Elwin, His Tribals, and India" என்னும் புத்தகத்தைப் பற்றிய சுனில் ஜனாவின் விமரிசனம்
* Kumarappa Institute Of Gram Swaraj (KIGS), Making sustainable development happen
* Report appearing in The Hindu

1 comment: