Saturday, January 17, 2004

பத்திரிகை சுதந்திரமும், சட்டமன்ற உரிமைகளும் - 3

ஷேகர் குப்தா
சிறிது இடைவேளைக்குப் பின்னர், ஷேகர் குப்தா தன் பேச்சைத் துவக்கினார். 'தி ஹிந்து' போலவே தன் பத்திரிகை மீதும் குஜராத் சட்டமன்றம் இரண்டு உரிமைப் பிரச்சினைகளை எழுப்பியுள்ளது என்றார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' குஜராத் சட்டமன்றத்தின் நடவடிக்கைகளைப் பற்றி எழுதும் போது "shouted", "committed a gaffe" போன்ற சொற்களைப் பயன்படுத்தியதற்காக இந்த உரிமை மீறல் எழுப்பப்பட்டிருக்கிறதாம். சாதாரணமாக இதுபோன்ற உரிமை மீறல் பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் தூர ஒதுக்கிவிடுவதே தன் வழக்கம் என்றும், ஆனால் இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்திருப்பதைப் பார்க்கையில் தானும் கவனமாக இருக்கப் போவதாகச் சொன்னார். பாராளுமன்றத்தில் நடப்பவை நேரடியாக ஒளிபரப்பப்படுவதால் எம்பிக்கள் கவனமாக நடந்துகொள்வதாகவும், ஆனால் சட்டமன்றங்களில் தரம் வெகுவாகக் குறைந்து போய்விட்டது என்றும் வருந்தினார். சோவின் வாதத்தை எடுத்துக் கொண்டு பாராளுமன்ற விவகாரங்கள் நேரிடையாக ஒளிபரப்பப்படும்போது அவைத்தலைவர் ஏதேனும் விவாதத்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கினாலும், அந்த விவாதம் நேரடி ஒளிபரப்பில் வெளியே போய்விடுகிறது. அதற்காக பாராளுமன்றம் நேரடி ஒளிபரப்பைத் தடை செய்து, காலந்தாழ்த்திய நேரடி ஒளிபரப்பாக்க முயற்சிக்குமா? ஒளிபரப்பு செய்யுமிடத்தில் ஒருவரை அமர்த்தி expunge செய்யப்பட்ட பகுதிகள் வரும்போது ஒளிபரப்பின் மீது 'கொசுவர்த்திச் சுருள் வாங்கச் சொல்லி' விளம்பரமா செய்ய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

அவையின் உறுப்பினர்களுக்கு அவையில் வாய்க்கு வந்ததைப் பேசும் அதிகாரம் கொடுத்து, பின் அதனை வெளியே சொல்லிவிடாதவாறு அவைக்குறிப்பு நீக்கம், உரிமை மீறல் போன்ற உரிமைகளையும் கொடுப்பது நியாயமாகாது என்றார். ஊடகங்களின் வேலையே அவையில் என்ன நடக்கிறது என்று அப்படியே வெளியில் சொல்லுவதுதான் என்றார். உச்ச நீதிமன்றங்கள் விமரிசனங்களைத் தாங்கக்கூடிய அளவிற்கு முதிர்ச்சி பெற்றுள்ளது என்றும் நாட்டின் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் கூட இப்படி முதிர்ச்சி பெற்றுள்ளார்கள் என்றும், மாநிலங்களின் முதலமைச்சர்கள்தான் வரவர இந்த முதிர்ச்சி இல்லாமல் எதற்கெடுத்தாலும் எரிச்ச அடைந்து கூத்தாடுகிறார்கள் என்றும் சொன்னார். 'தி ஹிந்து', தமிழக சட்டமன்ற விவகாரம் நடந்திராவிட்டால் நாட்டில் 90% சட்டமன்ற, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தங்களது 'உரிமைகள்' என்னவென்றே தெரிந்திருக்காது என்றும், இப்பொழுது தங்களுக்கு 'வானளாவிய' அதிகாரம் உள்ளது என்று அதைத் தவறாகப் பயன்படுத்த ஆரம்பிக்கப் போகிறார்கள் என்றும், இதனை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவதே சரியானது என்றும், அதற்காக ஊடகங்கள் போராட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

பல மாநிலங்களில், சட்டமன்றத்தின் அவைத்தலைவர் என்பவர் முதலமைச்சரின் அடியாளாகத்தான் செயல்படுகிறார் என்றார்.

சோ 'ஊடகங்களுக்கென்று தனியுரிமை எதுவும் வேண்டாம்' என்று சொன்னதைத் தான் ஒத்துக்கொள்ள முடியாது என்றும், முக்கியமாக ஒரு செய்தியின் ஊற்றை ரகசியமாக வைத்துக் கொள்வது போன்ற உரிமைகள் ஊடகங்களுக்கு நிச்சயம் தேவை என்றும் சொன்னார். பத்திரிகைகாரர்கள் தீவிரவாதிகளிடம் பேசியிருந்தால், அரசு நிறுவனங்கள் கேட்டுக்கொண்டால், அந்தத் தீவிரவாதிகளைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டும் என்பன போன்ற கட்டுப்பாடுகள் இருக்கக்கூடாது என்றார்.

No comments:

Post a Comment