Friday, January 30, 2004

இன்றைக்குக் குறிப்பிடப்பட வேண்டிய சில செய்திகள்

* வீரப்பன் கூட்டாளிகள் நான்கு பேருக்கு உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்துள்ளது. இனி குடியரசுத் தலைவரால் மட்டும்தான் இவர்களைக் காப்பாற்ற முடியும். இந்த வழக்கு பற்றிய செய்திகள் திகிலூட்டக் கூடியனவாக இருக்கின்றன. சிறப்புத் தனி தடா நீதிமன்றம் இந்த நால்வருக்கும் (சிமோன், ஞானப்பிரகாஷ், மாதையா, பிலவேந்திரா) கண்ணி வெடி வைத்து காவலர்கள் செல்லும் வண்டியினைத் தகர்த்ததாகக் குற்றம் சாட்டி ஆயுள் தண்டனை அளித்தது. மேல்முறையீட்டுக்காக இந்த நால்வரும் உச்ச நீதிமன்றம் செல்ல, அங்கு கர்நாடகா வழக்கறிஞர் தண்டனையை அதிகப்படுத்தக் கோர, உச்ச நீதிமன்றமும் இதனை ஏற்றுக்கொண்டு, இந்த நால்வருக்கும் மரண தண்டனை அளித்துள்ளது.

இது கொடுமை. உச்ச நீதிமன்றத்துக்கு நிச்சயமாக தண்டனையை மாற்றும் அதிகாரம் உண்டு என்றாலும், மரண தண்டனையையே உலகெங்கும் உள்ள பல நாடுகள் செயல்படுத்தாத நிலையில் கீழ் நீதிமன்றம் கொடுத்த ஆயுள் தண்டனையை மாற்றி இந்திய உச்ச நீதிமன்றம் மரண தண்டனையாக்கியது வருத்தத்துக்குரியது.

* குஜராத்தில் வி.எச்.பி, பஜ்ரங் தள் பொறுக்கிகள் எம்.எஃப்.ஹுசைனின் ஓவியங்களைக் கிழித்தெறிந்துள்ளனர். இந்த ஓவியக் கண்காட்சியில் புபேன் கக்கரின் ஓவியங்களும் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவைகளுக்கு எந்தக் கேடும் வரவில்லை (வரவேண்டுமென்பது என் விருப்பமல்ல!). இந்த முட்டாள்களுக்கு புபேன் கக்கர் ஒருபால் புணர்ச்சியாளர் என்று தெரிந்திருந்தால், "அட, போனதுதான் போனோம், இந்தாளோட ஓவியங்கள் கொஞ்சத்தையும் கிழித்துவிட்டு வந்திருக்கலாமோ" என்ற திருப்தி ஏற்பட்டிருக்கலாம். எவ்வளவு நாளைக்குத்தான் ஹுசேனின் ஓவியங்களை மட்டுமே குறிவைப்பது? கக்கரின் ஓவியங்களுக்கும் கொஞ்சம் 'குறி'வைக்கட்டுமே! (pun intended).

* டோனி பிளேர், பிபிசி, ஹட்டன் ரிப்போர்ட்

இதுவரை பிபிசியின் இரண்டு தலைகள் உருண்டுள்ளன. பிரிட்டன் பிரதமர் டோனி பிளேர் தப்பிவிட்டார். இப்பொழுது மீண்டும் அலாஸ்டேர் கேம்ப்பெல் வந்துவிடுவாரா?

ஹட்டன் விசாரணை பிளேர் மீது எந்தத் தவறும் இல்லை என்று முடித்து விட்டது.

No comments:

Post a Comment