Thursday, January 29, 2004

நீதித்துறையின் கேவலம்: குடியரசுத் தலைவருக்கே வாரண்ட்

தினமலரில் விரிவான செய்தி வந்துள்ளது. ரூ. 40,000 காசு வாங்கிக் கொண்டு குஜராத்தில் ஒரு மாஜிஸ்டிரேட் காட்டிய இடத்திலெல்லாம் கையெழுத்து போட்டிருக்கிறாராம். எதில் கையெழுத்து? குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கரே முதலியோர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கும் தாள்களில் கையெழுத்திட்டார். ஏன், எதற்கு, யார் என்று எந்தக் கேள்வியுமில்லாமல் இந்த விஷயம் நடந்துள்ளது. இதனையெல்லாம் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிருபர் ரகசிய வீடியோ கேமராவில் பிடித்துள்ளார். பின்னர் உச்ச நீதிமன்றத்தில் ஹரீஷ் சால்வே மூலம் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார்.

ஆடிப்போய்விட்டனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். அந்த மாஜிஸ்டிரேட்டின் பெயர் இன்னமும் வெளியிடப்படவில்லை. அந்த நீதிமன்றத்தின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சில நாட்கள் முன்னர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.பி.பரூச்சா கிட்டத்தட்ட 20% நீதிபதிகள் ஊழல் பேர்வழிகள் என்று சொல்லியுள்ளார். [நான் நேரிடையாக இதைச் சொல்லியிருந்தால் இது நீதிமன்ற அவதூறாகுமாம்... - அப்படித்தான் என்.விட்டல் சொல்கிறார். ஆனால் பரூச்சா இப்படிச் சொன்னார், அது உண்மையாக இருக்கலாம் என்று நான் நம்புகிறேன் என்று சொன்னால் அது நீதிமன்ற அவதூறாகாதாம்!]

இப்பொழுது தலைமை நீதிபதி கரே என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment