Wednesday, November 05, 2003

தமிழ் மின்-புத்தகங்கள் - 1

E-books என்பதை மின்-புத்தகங்கள் அன்று அழைக்கலாம் என நினைக்கிறேன். E-mail = மின்னஞ்சல் போல. (electron = மின்னணு; electricity = மின்சாரம்; electronic book = மின் புத்தகம்)

சரி, இந்த அளவுக்கு விஸ்தாரமாக இதைப் பற்றி என்ன பேச்சு? இப்பொழுதெல்லாம் அஞ்சல் என்றாலே நம்மில் பலருக்கு அது ஈமெயில் தான் என்றானது போல இனி வரும் நாட்களில் புத்தகம் என்றாலே அது முதலில் மின்-புத்தகமாகவும் பின்னரே தாள் புத்தகமாகவும் இருக்கப் போவதில் ஆச்சரியமில்லை.

மின்னஞ்சல் பயனாளர் எவரிடம் கேட்டாலும் அவர் உடனடியாக அதன் அருமை பெருமைகளைச் சொல்லுவார்: (அ) உடனடியாகப் பெறுதல் முடியும். (ஆ) கணினியில் சேர்த்து வைத்து வேண்டும்போது தேட முடியும். (இ) ஒரு கடிதத்தை அனுப்பும்/பெறும் செலவுகள் மிகக் குறைவு.

ஆனால் ஒரு கணினி மற்றும் இணைய இணைப்புக்கான மூலதனம் தேவை அல்லது இதெல்லாம் இருக்கும் ஒரு அலுவலகத்தில் வேலை தேவை, அல்லது அருகாமையில் 20 ரூபாய்க்கு ஒரு மணி நேரம் இணையத்தை மேய ஒரு கணினி மையம் தேவை.

ஆனால் ஒரு நீண்ட புத்தகத்தை - நாவலோ, சிறுகதைத் தொகுப்போ, கட்டுரைத் தொகுப்போ - படிக்கக் கணினியில் சாத்தியப்படுமா? அவ்வாறு படிப்பதை நீங்கள் விரும்புவீர்களா? இலவசமாக அல்ல. காசு கொடுத்து. படைப்பாளிக்குக் கொஞ்சமாவது பணம் போய்ச் சேர வேண்டுமல்லவா?

எனக்கு இரவு படுக்கப் போகுமுன் படுக்கையில் சாய்ந்து கொண்டே படிக்கப் பிடிக்கும். மடிக்கணினியானாலும் தடிக்கணினியாய் இருப்பதால் இது சாத்தியமல்ல. இப்பொழுது விற்பனையில் இருக்கும் எழுதுபலகை போன்ற கணினியைக் கண்ட காசு கொடுத்து வாங்குமளவிற்கு விருப்பமும் இல்லை. ஆனாலும் இந்த மின்-புத்தகங்களுக்கு எதிர்காலம் இருக்கிறது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏன் என்று பார்க்கலாமா?

1. படைப்புகளை வெளிக்கொணர்வது மிக எளிது, சிரமம் குறைவு, செலவும் குறைவு.

சாதாரணமாக ஒரு படைப்பாளி புத்தகத்தை எழுதி முடித்த பின்னர் புத்தக வெளியீட்டாளரைத் தேடிப் போக வேண்டும். பெயர் தெரியாதவராயிருந்தால் கைக்காசைக் கொடுத்தால்தான் வெளியிடுவேன் என்பார்கள். போன வாரம் தமிழ்-உலகம் யாஹூ குழுமத்தில் ஒருவர் தனது நண்பர் புத்தகம் வெளியிட கிட்டத்தட்ட இலங்கை ரூ. 20,000 சேர்த்து விட்டதாகவும், இன்னும் மேற்கொண்டு ரூ. 20,000 சேர்த்துக் கொண்டிருப்பதாகவும், குறைந்த விலையில் பதிப்பு செய்து தர ஏதேனும் பதிப்பகம் உண்டா என்றும் கேட்டிருந்தார்.

அப்படி பதிப்பித்தும் எவ்வளவு கஷ்டங்கள்? நூலகங்கள் வாங்கிக் கொள்ளுமா என்று அதன் பின்னர் ஓட வேண்டும். புத்தகம் விற்குமா, போட்ட பணம் திரும்பி வருமா என்றெல்லாம் கேள்விகள்.

அதெதுவும் கிடையாது இங்கே. கணினியிலே அடித்து, அங்கேயே பிழைதிருத்தம் செய்து, அப்படியே மின்-புத்தகம் ஆக்கி, இணையச் சந்தை நடத்துபவரிடம் கொடுத்துவிட்டால் போதும்.

நன்றாக ஓடுகிறதா? பின்னர் அச்சுப் பதிப்பு செய்து, தாளில் போட்டுவிடலாம் - வேண்டுமானால்....

2. சர்வதேசச் சந்தையை உடனடியாகப் போய்ச் சேரலாம்.

சினிமா மாதிரியோ, அல்லது ஆங்கிலப் புத்தகங்கள் மாதிரியோ இருந்தால் இந்திய உரிமை, உலக உரிமை என்றெல்லாம் பேசலாம். நூறோ, இருநூறோ விற்கும் புத்தகங்களை இந்தியாவிலிருந்துதான் வெளிநாட்டுத் தமிழர்கள் வாங்குகின்றனர். அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கும் புத்தகக் கடைகளுக்கு எழுதிப்போட்டு, இங்குள்ளவர்கள் அதனை எடுத்துக் கட்டிவைத்து தபாலில் அனுப்ப ஏகக் கட்டணம் (உடனடியாக வேண்டுமானால்). குறைந்த தபால் செலவில் வேண்டுமென்றால் ஒரு மாதத்திற்கு மேல் பொறுத்திருக்க வேண்டும்.

மின்-புத்தகங்களாக இருந்தால், காசைக் கொடுத்தவுடன் கீழிறக்க வேண்டியதுதான்.

No comments:

Post a Comment