Monday, November 24, 2003

ஜெ ஜெ சில குறிப்புகள் - மாலன் பதில்

மாலனின் திசைகள் கட்டுரையைப் பற்றிய என் எதிர்வினையை எனது வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அதற்கு மாலனிடமிருந்து வந்த பதில் கீழே.

அன்புள்ள பத்ரி,

உங்களது வலைப்பூவில் JJ சில குறிப்புக்கள் பற்றிய உங்கள் கருத்துக்களைப் படித்தேன். சில விளக்கங்கள் சொல்ல வேண்டும் என்று தோன்றியது. அவற்றை எழுதுகிறேன்.

"1. ஜெயலலிதாவின் மார்க்சியம், பெரியாரியம் பற்றிய கருத்துகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு அதன் மீதெல்லாம் கருத்து சொல்ல விருப்பமா என்றும் தெரியவில்லை. மிஞ்சிப் போனால் பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் மீது ஜெயலலிதா புகழாரம்தான் சூட்டுவார் (அப்பொழுதுதான் ஓட்டுகள் கிடைக்கும்)." என்று எழுதியிருகிறீர்கள்

பெரியார் மீதுள்ள ஜெயலலிதாவின் வெறுப்பு பல நேரங்களில் பலவிதங்களில் வெளிப்பட்டிருக்கிறது. கடந்த பல ஆண்டுகளாகவே பெரியார் பிறந்த நாளன்று அவரது சிலைக்கு மாலையணிவிக்கக் கூட ஜெயலலிதா சென்றதில்லை. அது வெறும் சடங்குதான். ஆனால் முத்துராமலிங்கத் தேவருக்கு அஞ்சலி செலுத்த விமானம் ஏறிப் பசும்பொன்னுக்குப் பறக்கும் ஜெயலலிதா, போயஸ் தோட்டத்திலிருந்து மிக அருகில் இருக்கும் அண்ணா மேம்பாலம் வரை வராததற்கு என்ன காரணம் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்? அவர் தனது ஆட்சியில் மாவட்டங்களுக்கோ, அரசு நிறுவனங்களுக்கோ பெரியாரின் பெயரை வைத்ததில்லை. அப்படி பெயர் வைப்பது என்பது அபிமானத்தின் ஒரு வித வெளிப்பாடுதானே? இந்து மதச் சடங்குகளில் பெரியாருக்கு இருந்த வெறுப்பும், ஜெயலலிதாவிற்கு இருக்கும் அபிமானமும் நாடறிந்த செய்தி. தொழிலாளர்கள் மீது இவர் காட்டிவரும் பகையுணர்வு (டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்களுக்கு கிராசுவிட்டி, பென்ஷன் கிடையாது) மார்க்சியத்தில் மரியாதை கொண்ட மனதிலிருந்து வருவதாக இருக்கும் என்றா நினைக்கிறீர்கள்?

2. புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியத்தில் உள்ள குறைபாடுகளாக ஒருசிலவற்றைக் காண்கிறார் ஜெயமோகன். அதில் ஒரு இலக்கிய விமரிகராகவே நடந்து கொண்டுள்ளார் ஜெயமோகன். கணையாழி நேர்காணலில் "இவ்வளவு போருக்குப் பின்னரும், பிரச்சினைகளுக்குப் பின்னரும் அவர்களின் இலக்கிய உலகம் தட்டையாகத்தான் இருக்கிறது" என்று சொன்னார் என்பதற்காக ஜெயமோகனுக்கு ஈழத்தமிழர் மீது கசப்புணர்வு என்று சொல்வது நியாயமாகாது. எனக்கு 'கிம்பெல் தி ஃபூல்' பிடிக்கவில்லை என்று (ஒரு பேச்சுக்கு) சொன்னால் நான் நாஜியாகி விடுவேனா? ஜெயலலிதாவை ஈழத்தமிழருக்கு எதிரானவராகக் காட்டுவதும் நியாயமில்லாதது. விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்றால் ஈழத்தமிழருக்கு எதிரானவராகி விடுவாரா?

விடுதலைப்புலிகளுக்கு மட்டுமல்ல, இலங்கைத்தமிழருக்கே எதிரானவர் ஜெயலலிதா என்பதை அவரது கடந்தகால நடவடிக்கைகள் நமக்குச் சொல்லுகின்றன.காரணம் அவர் இலங்கைத் தமிழர்கள் எல்லோரையும் புலிகளாகப் பார்த்தவர். அவர் ஆட்சியில் இருந்த போது நடந்த உலகத் தமிழ் நாட்டின் போதுதான், கார்த்திகேசு, சிவத்தம்பி போன்றவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். வேறு ஒரு சந்தர்ப்பத்தில் காந்தளகம் சச்சிதானந்தம் போன்றவர்களை நாடு கடத்தும் முயற்சிகள் நடந்தன. இலங்கைத் தமிழர்கள் காவல் நிலையத்தில் சென்று தங்களது கைரேகைகளைப் பதிவு செய்து கொள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

ஒரு புத்தகத்தை, நிராகரிப்பதும் இலக்கியத்தின் ஒரு பிரிவினரை ஒட்டு மொத்தமாக நிராகரிப்பதும் எப்படி ஒன்றாக முடியும்? ஜெயமோகன் இலங்கை எழுத்தாளர்களைப் பொதுமைபடுத்திப் பேசுகிறார். எழுத்தின் தரத்தை வாழ்வின் பொருளாதாரத்தோடு பிணைத்துப் பேசுகிறார். அவரது வாதம் சரியானது என்றால் வறுமையில் வாழ்ந்த பாரதியும், பு.பியும், சத்தான படைப்புக்களைத் தந்திருக்க முடியாது. அந்த வாதம் சரி என்றால் அந்த வாதத்தின் மறுதலையும் (converse) சரியாக இருக்க வேண்டும். அதாவது வளமான வாழ்வைப் பெறும் வாய்ப்புக் கொண்ட சிங்கப்பூர், மலேசிய, அமெரிக்க, ஆஸ்திரேலிய தமிழர்கள்தான் செழுமையான படைப்பைத் தந்திருக்க வேண்டும்.

உண்மை என்னவெனில், படைப்புகளின் தரம் என்பது நாட்டுக்கு நாடு மாறுபடும். படைப்புகளைப் பற்றிய மதிப்பீடுகள் செய்யும் போது அது எழுதப்படும் சமூகத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும். பொதுமைப்படுத்திப் பேசுவது மனச்சாய்வையே காட்டுகிறது.

3. அரைகுறை வரலாற்று உணர்வு. ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு (உணர்வு?) பற்றி நம்மால் இனங்காண முடியாது அவர் அதிகம் எழுதியதில்லை, பேசியதில்லை. எப்படி இவ்விருவரையும் ஒப்பிடுகிறார் என்றே தெரியவில்லை.

ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு ஊடகங்களின் உலகில் மிகப்பிரபலம். சர்க்காரியா கமிஷன் வழக்குகளிலிருந்து விடுபடுவதற்காக இந்திராகாந்தியிடம் பேரம் பேசும் விதமாக உச்ச நீதி மன்றத்தில் காவிரி வழக்கை வாபஸ் பெற்றார் கருணாநிதி என்று சட்ட சபையிலேயே பேசியவர் அவர். ஒவ்வொன்றும் வெவ்வேறு கால கட்டத்தை சேர்ந்தவை. சர்க்காரியா விசாரணைக்குப் பிறகு 89 வரை கருணாநிதி ஆட்சியில் இல்லை. தமிழகத்தின் அண்மைக்கால அரசியல் குறித்த அவரது அறிவே அவ்வளவுதான். ஜெயமோகனின் வரலாற்று அறிவை பின் தொடரும் நிழலில் படித்துப் புரிந்து கொள்ளலாம்.

4. இந்துத்வா சார்பு: ஜெயலலிதா இதனைத் தன் பல செய்கைகளில் காண்பித்து விட்டார். ஆனால் ஜெயமோகனைப் பற்றி அவரை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் கொண்டுவரும் குற்றச்சாட்டு இந்த ஆர்.எஸ்.எஸ் வைக்கோல் பொம்மையாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே? அவர் ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்தால் என்ன?

அவர் ஆர்.எஸ்.எஸ்காரராக இருப்பதில் எனக்கு ஆட்சேபம் ஏதுமில்லை. அப்படி அவர் இருப்பதைக் கண்டித்து நான் என் கட்டுரையில் எதாவது எழுதியிருக்கிறேனா? அது ஜெயலலிதாவிற்கும் அவருக்கும் இருக்கும் ஒற்றுமைகளில் ஒன்று. ஆர்.எஸ்.எஸ் வைதீக மனோபாவம் கொண்டது. வைதீக மனோபாவம் கொண்டவர்களுக்கு கருணாநிதி உகப்பானவராக இருக்க முடியாது. ஜெயமோகனுக்கு இந்த மனச்சாய்வு இருப்பதால், அவரது கருத்துகளை அப்படியே ஏர்றுக் கொள்ள முடியாது. You have to take it with a pinch of salt.

அவரது ஆணவம் எத்தகையது என்பதைப் பற்றியும் அதை ஏன் நிராகரிக்க வேண்டும் என்பது குறித்தும் வெங்கட்டுக்கு விரிவாக எழுதியிரிக்கிறேன். அதைத் தகவலுக்காக இத்துடன் இணைத்துள்ளேன்.

அன்புடன்
மாலன்

No comments:

Post a Comment