Tuesday, November 11, 2003

பத்திரிக்கையாளர்கள் கைதில் உச்ச நீதிமன்றத் தடை

கீழ்க்கண்ட செய்தி தினமலரில் வெளியாகியுள்ளது.

முட்டாள் என்று திட்டினால் அவதூறா? சால்வே கதையால் பரபரப்பான நீதிமன்றம்!

உச்சநீதிமன்றத்தில் நேற்று ஹிந்து பத்திரிக்கையாளர்கள் தாக்கல் செய்த மனு மீது காரசாரமாக விசாரணை நடந்து கொண்டிருந்த போது அவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஹரீஷ் சால்வே உணர்ச்சிகரமாக உரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவர் உதாரணத்திற்கு சொன்ன ஒரு சம்பவம் வழக்கின் திசையையே அசைத்துக் காட்டியது. நீதிபதிகளை நிமிர்ந்து அமர வைத்த ஹரீஷ் சால்வேயின் உதாரண உரை வருமாறு:

இங்கிலாந்து நாட்டில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்பாக விசாரணை செய்து ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் ஒரு தீர்ப்பளித்தது.

உடனே அந்த தீர்ப்பை விமர்சித்து ஒரு பத்திரிக்கை, "தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகளும் வயதான முட்டாள்கள்," என்று குறிப்பிட்டது. பின்னர் சில வக்கீல்கள் இதனை நீதிபதிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அந்த பத்திரிக்கையின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டீர்களா? என்று வக்கீல்கள் கேட்டனர்.

இதற்கு நீதிபதிகள் விளக்கம் அளித்தனர். "அந்த பத்திரிக்கை எங்களைப் பற்றி இரண்டு விவரங்களைக் கூறியுள்ளது. ஒன்று நாங்கள் வயதானவர்கள் என்பது. இது உண்மை தான். ஏனென்றால் நாங்கள் வயதானவர்கள் தான். இரண்டாவது நாங்கள் முட்டாள்கள் என்பது. எங்களைப் பற்றிய அபிப்ராயத்தை கூறும் போது முட்டாள்கள் என்று அந்த பத்திரிக்கை விமர்சனம் செய்துள்ளது. இது அந்த பத்திரிக்கையின் கருத்து. இது எப்படி அவதூறாக முடியும்? வயதான முட்டாள்கள் என்று எழுதுவதற்கு பதிலாக வயதான 'ஊழல்' முட்டாள்கள் என்று எழுதியிருந்தால் அது தான் குற்றம்," என்று நீதிபதிகள் தெரிவித்தனர். உள்நோக்கம் இல்லாத பட்சத்தில் எந்த வாசகமும் சட்டமன்ற அவமதிப்பு ஆகாது.

இவ்வாறு ஹரீஷ் சால்வே கூறியதும், ஜனரஞ்சகமான இந்த உரையின் போது நீதிமன்றத்தில் கலகலப்பு நிலவியது. நீதிபதிகளும் நிமிர்ந்து அமர்ந்தனர். அப்போது வழக்கின் கோணமே திசைமாறிப் போனது.

மணிக்கணக்கில் நடந்த சட்டச் சிக்கல்களின் சர்ச்சை ஒரு உதாரணத்தின் மூலமாக தீர்வுக்கு வந்தது.


இந்தக் கதை பற்றி நான் கூகிள் மூலம் தேடிய போது எனக்கு குல்தீப் நயார் எழுதிய சில கட்டுரைகள் கிடைத்தன. இவை தி ஹிந்து, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் ரீடிஃப் இல் வெளியானவை. தி ஹிந்துவில் VR கிருஷ்ண ஐயர் எழுதியுள்ள ஒரு கட்டுரையில் இது பற்றி மேலும் சில விவரங்கள் தெரிய வருகின்றன. அதன் மொழிமாற்றம்:

திரு.நாரிமன் அந்தப் பேச்சின் நடுவே ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார். இங்கிலாந்தின் பிரபுக்கள் அவையில் அனுபவத்தில் முதிர்ந்தவரான லார்டு டெம்பிள்மேன் இந்தியா வந்திருந்தார். அவர் பத்திரிக்கைச் சுதந்திரம் மற்றும் நீதிமன்ற அவதூறு பற்றிப் பேசினார். பேச்சு "ஸ்பைகேட்சர்" என்ற புகழ்பெற்ற வழக்கை நோக்கித் திரும்பியது. டெய்லி மிர்ரர் என்ற பத்திரிக்கை அந்த வழக்கைக் விசாரித்த மூன்று நீதிபதிகளின் புகைப்படத்தைத் தலைகீழாக வெளியிட்டு அந்தப் படத்தின் கீழே "கிழ முட்டாள்கள்" என்று எழுதியிருந்தது. நாரிமன் டெம்பிள்மேனிடம், "ஏன் அந்தப் பத்திரிக்கை மீது அவதூறுக்கான நடவடிக்கை எடுக்கவில்லை" என்று கேட்டார். அதற்கு டெம்பிள்மேன் அளித்த பதில் நாரிமனை வெகுவும் கவர்ந்தது. டெம்பிள்மேன் சிரித்துக் கொண்டே, சிறிதும் காழ்ப்புணர்ச்சியின்றி, "இங்கிலாந்தில் நீதிபதிகள் தங்கள் மீது உள்நோக்கமின்றி உதிர்க்கப்படும் வசைச் சொற்களைப் பொருட்படுத்துவதில்லை. உண்மையில் நான் கிழவன்தான்; நான் முட்டாள் இல்லை என்று நான் நினைத்தாலும் மற்றொருவர் மிகவும் தீவிரமாக நான் முட்டாள்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு என்ன வேண்டுமானாலும் கருத உரிமை இருக்கிறது." என்றார்.


முந்தையது
தி ஹிந்துவின் முழு கவரேஜ்

No comments:

Post a Comment