Sunday, November 23, 2003

குருமூர்த்தி - மும்பை டப்பாவாலாக்கள் பற்றி

குருமூர்த்தியின் 'இவர்கள் படிக்காத மேதைகள்!' பற்றி
துக்ளக் 26 நவம்பர் 2003 தேதியிட்ட இதழ், "தண்ணீர் விட்டோ வளர்த்தோம்" கட்டுரைத் தொடரின் 60ஆவது பகுதியிலிருந்து

நவம்பர் முதல் வாரத்தில் பிரிட்டனின் பட்டத்து அரசர் சார்லஸ் இந்தியா வந்திருந்தார். அப்பொழுது அவர் மும்பை நகரத்தில் அலுவலகங்களுக்கு வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்துச் செல்லும் 'டப்பாவாலா' என்று அழைக்கப்படுபவர்களைச் சந்தித்தார். இது பெரிய நிகழ்ச்சியாகப் பேசப்பட்டது. உண்மையில் அப்பொழுதுதான் நான் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டேன். இவர்களைப் பற்றிய கட்டுரைதான் இந்த இதழில் குருமூர்த்தி எழுதியது.

இந்த டப்பாக்காரர்களின் தொழில் என்ன? மும்பை அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் வீட்டுச் சாப்பாட்டைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அவர்கள் அலுவலகம் செல்லும்போது வீட்டில் உணவு தயாராயிருக்காது. சென்னையில் வெறும் தயிர் சாதத்தை மட்டும் டப்பாவில் பிசைந்து அவசர அவசரமாக அள்ளி எடுத்துச் செல்பவர்களைப் பார்த்திருக்கிறோம், அல்லது இதைப் படிக்கும் நீங்களும் ஒருவராக இருக்கலாம். ஆனால் மும்பை மக்கள் இதை வேறு விதமாகக் கையாளுகின்றனர். வீட்டிலிருப்பவர்கள் சமையலை முடித்து அதனை டப்பாக்களில் வைத்து இந்த டப்பாக்காரர்களிடம் ஒப்படைக்கின்றனர். டப்பாக்காரர்கள் இப்பாத்திரங்களை வீடுகளில் இருந்து சேகரித்து, அதன் மீது பிரத்யேகமான ஒரு குறியிட்டு, பக்கத்தில் உள்ள இரயில் நிலையத்துக்கு எடுத்து வந்து அனுப்புகிறார்கள். இது போய்ச் சேர வேண்டிய இரயில் நிலையத்தில் சேகரிக்கப்பட்டு, உணவு உட்கொள்பவருக்குப் போய்ச்சேர்ந்து அவர் உண்டுமுடித்தபின் வந்த வழியைப் பின்தொடர்ந்து உண்டவர் வீட்டுக்குள் வருமுன் தான் போய்ச் சேர்ந்து விடுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஒருநாளைக்கு மொத்தமாக 2 லட்சம் டப்பாக்கள் பயணிக்கின்றன. இவற்றைப் பார்த்துக் கொள்வது 5000 டப்பாக்காரர்கள்.

இதுவும் ஆச்சரியமானதொன்றல்ல. ஆனால் ஃபோர்ப்ஸ் என்னும் நிறுவனம் செய்த ஆராய்ச்சியில் தெரிய வந்தது என்னவென்றால் இம்மாதிரியான ஒரு விஷயத்தில் இரண்டு மாதங்களில் அதிக பட்சமாக ஒரு தவறுதான் நிகழ்கிறது! அதாவது சிக்ஸ் சிக்மா நிறுவனங்களை விடப் பதினாறு மடங்கு உயர்வு பெற்றதாக இருக்கிறது இவர்களது தொழில் திறன்!

முந்தையது: அகப்படுவாரா நம் நாட்டு பின்லேடன்

No comments:

Post a Comment