Thursday, November 27, 2003

டெல் பெங்களூர் தொலையழைப்பு மையம் பற்றிய செய்திகள்

அமெரிக்காவைச் சேர்ந்த டெல் கணினி விற்பனை நிறுவனம் நுகர்வோருக்கான பிரச்சினைகளைத் தொலையழைப்பு மையங்கள் மூலம் தீர்த்து வந்துள்ளது. தொலையழைப்பு மையங்கள் மூலமாகத்தான் அவர்களது விற்பனையே நடந்து வந்துள்ளது. இப்பொழுது இணையத்தையே இதற்குப் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். மற்ற அமெரிக்க, ஐரோப்பிய நிறுவனங்களைப் போல டெல்லும் தங்களது தொலையழைப்பு மையத்தை இந்தியாவில் பெங்களூரில் அமைத்தனர்.

தொலையழைப்பு மையங்கள் இந்தியாவிற்குப் போவது அமெரிக்காவில் உள்ள கணினிசார் தொழிலாளர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் பிடிக்காததாக உள்ளது. தொலையழைப்பு மையங்களிலிருந்து ஆரம்பித்து மற்ற பல கணினிசார் தொழில்களும் இந்தியா போன்ற குறைந்த செலவாகும் நாடுகளுக்குப் போய்விடும் என்ற பயம் இதற்குக் காரணம்.

இப்படி இருக்கையில் டெல் தனது பெரும் நுகர்வோர்களான மற்ற நிறுவனங்களின் தொலையழைப்புகளை பெங்களூரிலிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கே மாற்றிக் கொண்டுவிட்டனர்; இது டெல்லின் அமெரிக்க நுகர்வோருக்கு பெங்களூர் சேவையில் ஏற்பட்ட வெறுப்பே காரணம் என்பது போல அமெரிக்க ஊடகங்களில் திங்கள் கிழமை அன்று செய்திகள் வந்தன.

இதுபற்றிய வெங்கட்டின் வலைப்பதிவு.

டெல் தொலையழைப்பு மையங்கள் மீது வந்த செய்தி தவறானது என்று புதன் கிழமை 'தி ஹிந்து' செய்தி தெரிவிக்கிறது.

தொலையழைப்பு மையங்கள் பற்றிப் பல கருத்துக்கள் இருக்கலாம். பிற நாட்டு வேலைகளை இந்தியா பறித்துக் கொள்கிறதா?; பன்னாட்டுப் பணமுதலைகள் இந்திய உழைப்பை உறிஞ்சிச், சக்கையாக்கி, பிலிப்பைன்ஸ் ஓடி விடுவர்; இந்நாட்டு இளைஞர்கள் சார்லஸ், டயானா என்றெல்லாம் பெயரிட்டுக் கொண்டு, நுனி நாக்கால் அரைகுறை ஆங்கிலம் பேசிக் கொண்டு, கண்ட கண்ட நேரங்களில் விழித்து, மற்ற நேரங்களில் தூங்கிப், பைத்தியம் பிடித்து அலைவர்; வாரம் ஏழு நாட்களும், நாளுக்கு இருபத்தி நான்கு மணிநேரங்களும் வேலை, வேலை, வேலை - இப்படி எத்தனையோ கருத்துகளும், எதிர் கருத்துகளும் இருக்கின்றன.

ஆனால் அமெரிக்கப் பத்திரிக்கைகளில் வந்த செய்தியின் உள்ளார்ந்த விமரிசனம் இதுவே: "ஆளாளுக்கு இந்தியா போய் தொலையழைப்பு மையங்களை நிறுவுகின்றனர். ஆனால் உணமையில் அந்த ஊர் தொலையழைப்பு மைய ஊழியர்கள் எல்லாம் அடாசுகள். டெல்லே... டெல்லே... ஒருசில கடினமான வேலைகளை அந்த ஊர் லூசுகள் சொதப்பியதால் மீண்டும் டெக்ஸாஸ் கொண்டுவந்து விட்டனர். நம்மூர் டெக்ஸாஸ் வித்தகர்கள் நொடியில் நுகர்வோரின் பிரச்சினைகளைத் தீர்த்திருப்பார்கள். ஆகவே இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், இந்தியா போக வேண்டாம், தரக்குறைவான ஊழியர்களை வைத்துக் கொண்டு தடுமாற வேண்டாம், டெக்ஸாஸ், டென்னஸ்ஸியில் தொலையழைப்பு மையம் அமையுங்கள், தரத்தை அதிகரியுங்கள்."

இப்படிப்பட்ட விஷமத்தனமான செய்தி தவறு என்று ஊர்ஜிதமாகி உள்ளது.ஆனாலும் அமெரிக்க ஊடகங்களில் இந்தப் பிரச்சினை பெரிதாக்கப்பட்டு இப்பொழுதும் கூட விஷமமான செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.

No comments:

Post a Comment