Monday, November 17, 2003

மாலனின் ஜெ.ஜெ சில குறிப்புகள்

கருத்துப்பரிமாறல் பகுதி இணைத்தபின் அதுவே வலைப்பதிவின் திசையை கொஞ்சம் இழுத்துச் செல்லுமோ என்று தோன்றுகிறது. இதனை நான் வெங்கட்டின் வலைக்குறிப்பில் பார்த்திருக்கிறேன்.

ரவியா மாலனின் ஜெ-ஜெ சில குறிப்புகள் கட்டுரையைப் பற்றிய எனது கருத்தைக் கேட்டிருந்தார். வெங்கட் இதுபற்றி தனது வலைக்குறிப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். வெங்கட்டின் கருத்துகளுக்குப் பெரும்பாலும் உடன்படுகிறேன்.

இந்தக் கட்டுரை மூலம் மாலன் ஜெயமோகனுக்கு அநீதி இழைத்துள்ளார் என்றே சொல்லுவேன். மாலன் இரு 'ஜெ' க்களுக்கும் ஒற்றுமைகளாகக் காண்பிப்பது: (அ) ஆணவம் (ஆ) தன்னைப் பற்றிய மிகையான எண்ணம் (இ) இந்துத்வாவை நோக்கிச் சாய்ந்த ஆர்.எஸ்.எஸ் மனோபாவம் (ஈ) ஈழத்தமிழர் மீதுள்ள உள்ளார்ந்த கசப்பு (உ) மார்க்சியம், பெரியாரியம் மீது எதிர்ப்புணர்வு (ஊ) அரைகுறை வரலாற்று உணர்வு.

1. ஜெயலலிதாவின் மார்க்சியம், பெரியாரியம் பற்றிய கருத்துகள் எங்கும் பதிவு செய்யப்படவில்லை. அவருக்கு அதன் மீதெல்லாம் கருத்து சொல்ல விருப்பமா என்றும் தெரியவில்லை. மிஞ்சிப் போனால் பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோர் மீது ஜெயலலிதா புகழாரம்தான் சூட்டுவார் (அப்பொழுதுதான் ஓட்டுகள் கிடைக்கும்). ஆனால் ஜெயமோகன் அவைகளைப் பற்றிய தனது கருத்துகளை பகிரங்கமாகவே வெளியிட்டுள்ளார். மார்க்சியம், பெரியாரியம் மீது எதிர்ப்புணர்வு இருப்பது தவறு என்பது போலச் சொல்கிறார் மாலன். அத்துடன் என்னால் ஒத்துப் போக முடியாது.

2. புலம்பெயர்ந்தவர்களின் இலக்கியத்தில் உள்ள குறைபாடுகளாக ஒருசிலவற்றைக் காண்கிறார் ஜெயமோகன். அதில் ஒரு இலக்கிய விமரிகராகவே நடந்து கொண்டுள்ளார் ஜெயமோகன். கணையாழி நேர்காணலில் "இவ்வளவு போருக்குப் பின்னரும், பிரச்சினைகளுக்குப் பின்னரும் அவர்களின் இலக்கிய உலகம் தட்டையாகத்தான் இருக்கிறது" என்று சொன்னார் என்பதற்காக ஜெயமோகனுக்கு ஈழத்தமிழர் மீது கசப்புணர்வு என்று சொல்வது நியாயமாகாது. எனக்கு 'கிம்பெல் தி ஃபூல்' பிடிக்கவில்லை என்று (ஒரு பேச்சுக்கு) சொன்னால் நான் நாஜியாகி விடுவேனா? ஜெயலலிதாவை ஈழத்தமிழருக்கு எதிரானவராகக் காட்டுவதும் நியாயமில்லாதது. விடுதலைப் புலிகளுக்கு எதிரானவர் என்றால் ஈழத்தமிழருக்கு எதிரானவராகி விடுவாரா?

3. அரைகுறை வரலாற்று உணர்வு. ஜெயலலிதாவின் வரலாற்று அறிவு (உணர்வு?) பற்றி நம்மால் இனங்காண முடியாது அவர் அதிகம் எழுதியதில்லை, பேசியதில்லை. எப்படி இவ்விருவரையும் ஒப்பிடுகிறார் என்றே தெரியவில்லை.

4. இந்துத்வா சார்பு: ஜெயலலிதா இதனைத் தன் பல செய்கைகளில் காண்பித்து விட்டார். ஆனால் ஜெயமோகனைப் பற்றி அவரை எதிர்ப்பவர் ஒவ்வொருவரும் கொண்டுவரும் குற்றச்சாட்டு இந்த ஆர்.எஸ்.எஸ் வைக்கோல் பொம்மையாக இருக்கிறது. இருந்துவிட்டுப் போகட்டுமே? அவர் ஆர்.எஸ்.எஸ் காரராக இருந்தால் என்ன? அசோகமித்திரன் கூட ஆர்.எஸ்.எஸ் நலவிரும்பி என்பது போல அ.மார்க்ஸ் எழுதியுள்ளார். அப்துல் ரகுமானும் அதையே நினைக்கலாம் (கலைஞருக்கு வணக்கம் சொல்லாமல் நேரடியாக இளையபாரதியின் புத்தகங்களைப் பற்றி பேச வந்துவிட்டார் என்று அமுதசுரபியில் காய்கிறார்).

5. ஆகக் கடைசியில் ஆணவம், தன்னைப் பற்றிய மிகையான எண்ணம் ஆகியனவே மிஞ்சுகிறது. அது பலருக்கும் அப்படியே. கிட்டத்தட்ட நம்நாட்டு மக்கள் தொகையில் பாதி பேருக்கு மேல் ஆணவமும், தன்ன்னைப் பற்றிய மிகையான எண்ணமுமே. (மீதி பேருக்குத் தங்களைப் பற்றிய உயர்வான எண்ணத்தைச் சிந்தனை செய்யுமளவிற்குத் திறன் இல்லை.)

No comments:

Post a Comment