Sunday, November 09, 2003

தமிழ் வசவுச் சொற்கள்

காளமேகம் மற்றும் மற்ற தனிப்பாடல் வித்தகர்களின் வசவுச் சொல்லாண்மை பற்றி ராயர் காபி கிளப்பில் பேசிக்கொண்டிருக்கையில், நான் இப்பொழுது படித்துக் கொண்டிருக்கும் இலக்கியச் சிந்தனை 2002 ஆம் ஆண்டின் சிறந்த சிறுகதைகள் (வானதி பதிப்பகம் வெளியீடில்) புத்தகத்தில் மதிப்புரை எழுதும் ராஜரங்கன் சொல்வது இது:

"ஒளிவு மறைவற்ற பேச்சு என்றதும், தற்காலத் தமிழ்ச் சிறுகதைகளில் ஒரு சாராரின் போக்கு நினைவுக்கு வருகிறது. இடக்கரடக்கலை பூர்ஷ்வாக்களின் குறியீடாக எடுத்துக் கொள்வதால் இவர்களுடைய எழுத்தில் 'நாலெழுத்து மந்திரங்கள்' தாராளமாகவே புழங்குகின்றன. வட்டார வழக்கோ, வெளிநாட்டுத் தமிழ்க் கதைகளோ எதுவாயினும் "பச்சை" இச்சைக்குரிய நடையாகப் பயில்வது சகஜமாகி விட்டது. "எல்லோரும் வாழி என்பதற்கு எதுகையான ஒரு வசவு மொழியை அவன் பிரயோகித்தான்" என்று ஒரு பிரபல எழுத்தாளர் முன்பு எழுதிய போது முகிழ்த்த புன்முறுவல், படித்த, ஆனால், வம்புகளில் ஆர்வம் கொண்ட, மத்தியதர வர்க்கத்தின் ரசிப்பைக் காட்டியது. இன்று அந்த எதுகையில்லாமலே சரளமாக வசவு மொழிகளைக் கையாளும் இயல்பும், பக்குவமும் சில தமிழ் எழுத்தாளர்களுக்கு வந்திருப்பது அவர்களாக எடுத்துக் கொண்ட சுதந்திரம்."

'நாலெழுத்து மந்திரங்கள்' - இவையெல்லாம் ஆங்கில நாலெழுத்து சமாச்சாரங்கள். தமிழில் வசவு வார்த்தைகள் இரண்டெழுத்தில் ஆரம்பித்து, ஐந்தெழுத்திற்கும் மேற்பட்டவைகள். மேற்சொன்னதைப் படிக்கும் போது அசோகமித்திரனின் '18வது அட்சக்கோடு' பத்தி ஒன்று நினைவுக்கு வந்தது. உங்களுக்காக இதோ:

"ஆங்கில மொழியின் நான்கு எழுத்துச் சொற்களைத் தாராளமாக உபயோகிப்பார்கள். அதற்கு ஒரு பொருத்தமே இருக்காது. கல் தடுக்கினால் நான்கெழுத்து, புல் தடுக்கினால் நான்கெழுத்து. கில்லிதாண்டுலில் தவறினால் நான்கெழுத்து, பம்பர ஆட்டத்தில் தவறினால் நான்கெழுத்து, மரமேறினால் நான்கெழுத்து. மாடு போனால் நான்கெழுத்து, பிளாசா கொட்டகைக்குப் போய் இரண்டு மணிநேரம் கியூவில் நின்று ஜான் ஹால்-மரியா மாண்டஜ் சினிமாவுக்கு டிக்கெட் கிடைக்காவிட்டால் நான்கெழுத்து.

மாரிஸுக்குப் பல சகோதரர்களிடையில் இரு அக்காக்களும், ஒரு தங்கையும் உண்டு. அவர்களோடு மாரிஸுக்கு அபிப்ராய பேதமேற்பட்டாலும் நான்கெழுத்து. இதில் ஒரு குறிப்பிடத்தக்கது, அப்பெண்களும் இந்த நான்கெழுத்துச் சொற்களைப் பதிலுக்கு வீசுவார்கள்."

பல ஆண்டுகளுக்கு முன்னர் soc.culture.tamil இல் தமிழ் வசவு வார்த்தைகள் அனைத்தையும் திரட்டும் அரும்பெரும் பணி ஒன்று நடந்தது. அந்தப் பொக்கிஷக் குவியல் இப்பொழுது கூகிளோ அல்லது வேறெங்கோ கிடைக்குமா என்று தெரியவில்லை.

No comments:

Post a Comment