Sunday, November 23, 2003

ப.சிதம்பரம் - காரணம் சொல்லாத அரசு!

ப.சிதம்பரம் - காரணம் சொல்லாத அரசு!
கல்கி 23/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 5

அமைச்சர்கள் பற்றிய சில முக்கியக் கருத்துகளை இந்தக் கட்டுரையில் வைக்கிறார் சிதம்பரம்.

1. அமைச்சர்களின் தகுதி: ஆரம்ப நாட்களில் தகுதியான, விஷயம் அறிந்த அமைச்சர்களையே பிரதம மந்திரியோ, முதலமைச்சரோ தேர்ந்தெடுத்தனர். ஆனால் இப்பொழுது அமைச்சர்களாக இருப்பவர்களின் தகுதி கேவலமானதாக உள்ளது. ஒரு சில மேற்கோள்கள்:

"இருபத்தியோராம் நூற்றாண்டில் யார் வேண்டுமென்றாலும், அந்தத் துறையை வேண்டுமென்றாலும் ஏற்று நடத்தி விட முடியும் என்பது மூட நம்பிக்கை."

"யார் எந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் அதை நாம் சகித்துக் கொள்கிறோம்."

இம்மாதிரி வருத்தபடக் கூடிய பல நிகழ்வுகள் சமீபத்தில் நடந்து வருகின்றன. ஆனாலும் ஒருசில சட்டமன்றங்களில் (ஆந்திரா போல்) கற்றறிந்த பலர் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர். மத்திய அமைச்சரவையில் முக்கியமாகத் திறமை வாய்ந்த ஒருசிலர் இருக்கின்றனர். தமிழக அமைச்சரவையில் இதுபோன்ற அதிர்ஷ்டம் நமக்குக் கிடைக்கவில்லை!

2. அமைச்சர்களைப் பந்தாடுவது: இந்தச் சாதனை முழுக்க முழுக்க ஜெயலலிதாவையே சாரும். அவரது அமைச்சரவையில் யார் எந்தத் துறைக்கு அமைச்சர் என்று அந்தந்த அமைச்சர்களுக்கே சில சமயம் தெரிவதில்லை.

சிதம்பரம் சொல்லாது விட்ட விஷயம் ஜெயலலிதாவின் பந்தாடல் அமைச்சரவையில் மட்டுமல்ல, நிர்வாகத்திலும்தான். தலைமைச் செயலராக இருக்கட்டும், சென்னைக் காவல்துறை கமிஷனராக இருக்கட்டும். நில் என்றால் நில், செல் என்றால் செல். இது மாதிரி இந்தியாவில் வேறு எந்த அரசும் நடந்துகொண்டதில்லை.

3. நிழல் அமைச்சரவை: இங்கிலாந்து போன்ற நாடுகளில் எதிர்க்கட்சிகள் நிழல் அமைச்சரவை நடத்தி வரும் தேர்தலில் வென்றால் யார் எந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கப் போகிறார்கள் என்பதனை வாக்காளர்களுக்கு உணர்த்தி விடுவார்கள். அதிலிருந்து மக்கள் வாக்களிக்கும்போது நல்ல வேட்பாளரோடு, இந்த வேட்பாளர் ஒரு நல்ல அமைச்சராகவும் இருப்பாரா என்று தேர்ந்தெடுக்க வசதியாக இருக்கும். நாம் முதலமைச்சர்/பிரதமர் ஆகியோரைப் பற்றி கவலைப்படும் அளவிற்கு அமைச்சர்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லை.

கல்கி 16/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 4

No comments:

Post a Comment