Wednesday, November 05, 2003

ப.சிதம்பரம் - கட்டாய வாக்குப் பதிவு

கல்கி 9/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 3

இந்த இதழில் சிதம்பரம் எழுதுவது குடிமக்களுக்கு இருக்கும் வாக்குரிமையைப் பற்றி.

1. வாக்கு சதவிகிதம் கிராமங்களை விட நகரங்களிலேயே குறைந்து இருக்கிறது என்று ஆதங்கப்படுகிறார்.

"நகர்ப்புற நாகரிகமோ, கல்வித் தகுதியோ நமக்கு ஜனநாயக உணர்வுகளை அதிகரித்து விடவில்லை. இன்னும் சொல்லப்போனால், மெத்தப் படித்தவர்களும், மேற்கத்திய உலகியல்களை ஏற்றுக் கொள்பவர்களும், தங்களுக்குள்ள குறைந்தபட்ச சமூகப் பொறுப்புகளை நிறைவேற்றத் தவறுகிறார்கள். அரசியல் என்பது வெறுக்கத்தக்கது என்றும், அரசியல்வாதிகளில் யாருமே ஒழுக்கமானவர்கள் அல்ல என்றும், அவர்களிடையே ஓர் உணர்வு பரவியிருக்கிறது."

"இந்தியாவில் வாக்குப் பதிவு எப்பொழுது எண்பது சதவிகிதத்தைத் தாண்டுகிறதோ, அப்பொழுதுதான் உண்மையான ஜனநாயகத் தேர்தல் நடைபெறுகிறது என்று நான் கருதுவேன்."

80% எட்ட முடியுமா என்று தெரியவில்லை. இந்தியாவில் பிரச்சினைகள் நிறைந்த ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளை விடுத்து, கிட்டத்தட்ட 60% அல்லது அதற்கு மேல் தான் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருக்கிறது. இது நிச்சயமாக அதிகமாக வேண்டும். புதிதாக வாக்குரிமை பெறும் இளைஞர்களை (இருபாலரும்) ஜனநாயகக் கடமைகளில் ஈடுபடச் சொல்லி வற்புறுத்த வேண்டும். நகர்ப்புறங்களில், சிதம்பரம் சொன்னது போல, "மெத்தப் படித்தவர்கள்" மெத்தனத்தோடே அரசியலில் ஈடுபடாமல் உள்ளனர். இந்த "மெத்தப் படித்தவர்கள்" வாக்களிப்பதோடு நில்லாமல் சென்னை கார்ப்பரேஷன் அல்லது தங்களூர்ப் பஞ்சாயத்து, முனிசிபாலிட்டி தேர்தலிலாவது நிற்கவும் வேண்டும்.

முழுநேர வேலையில் ஈடுபடாதவர்கள், சுயதொழில் புரிவோர், வேலையிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் ஆகியோர் இதனை முயற்சிக்கலாமே?

2. வாக்களிப்பவர்கள் எவ்வாறு தகுதி அடிப்படையில் வாக்களிக்காமல் சாதி, மத அடிப்படையிலும், பணத்துக்காகவும் வாக்களிக்கின்றனர் என்று வருத்தப்படுகிறார்.

3. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தேர்தலில் நிற்பதோடு மட்டாமல் ஜெயித்து அமைச்சர்களாகவும் உள்ளனர் என்கிறார். இதெல்லாம் நாம் அறிந்ததே. ஆனால் என்னை அதிர வைத்தது இந்த மேற்கோள்:

"ஆந்திர மாநிலத்தில் இரட்டைக் கொலை வழக்கில் (இபிகோ பிரிவு 302) குற்றம் சாட்டப்பட்டவர் ராமசுப்பாரெட்டி. அவர் மீது வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. ஆயினும் அவர் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் ஓர் அமைச்சர்!"

பீஹாரோ, உத்திரப் பிரதேசமோ, நம்ப முடியும். ஆனால் நான் மிகவும் மதிக்கும் சந்திரபாபு நாயுடுவின் அமைச்சரவையில் இப்படியா? இது பற்றி மேற்கொண்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

கல்கி 2/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 2

No comments:

Post a Comment