Sunday, November 23, 2003

அஸ்ஸாமும், பீஹாரும் - 1

இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்கப் பல நாச சக்திகள் முயன்று கொண்டிருக்கின்றன. இதுவரை இந்தியாவின் ஒருமைப்பாட்டைப் பலர் கேள்விப்படுத்தியுள்ளனர், அவர்கள் அனைவரையும் நாச சக்திகள் என்று சொல்ல மாட்டேன்.

ஒரு காலத்தில் 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்று கோஷம் எழுப்பப்பட்டது. அப்பொழுது சோஷியலிச முறையில் மத்தில் ஆட்சி நடத்திய காங்கிரஸ் வளர்ச்சிப் பணிகள் அனைத்தையும் வாக்குகள் கிடைக்கும் வட மாநிலங்களுக்கே அளித்து வந்தது. உத்திரப் பிரதேசத்தில் 80க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்; தமிழகத்திலோ 32 இடங்கள்தான். ஆனால் தாராளமயமாக்கல், மத்தியில் கூட்டாட்சி, தொழில் வளர்ச்சி, அடிப்படை வசதிகள் வளர்ச்சி ஆகியவையினால் இன்று தென் மாநிலங்களின் வளர்ச்சி வட மாநிலங்களை விட அதிகமாகவே உள்ளது.

வளர்ச்சியில்லாமை, சரியான அளவில் வேலை வாய்ப்பு இல்லாமை ஆகிய காரணங்கள் சேர்ந்தே பிரிவினைவாதம், தீவிரவாதம் ஆகியவை வளரக் காரணமாயிருக்கின்றன. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் போன்ற இடங்களில் ஏற்பட்ட வன்முறைகள், பிரிவினை வாதம் ஆகியவைக்கு மற்ற காரணங்கள் முன்னிலை வகித்தாலும் வளர்ச்சி மற்றும் பொருளாதாரம் ஆகியவை அடிப்படையாக உள்ளன. அஸ்ஸாமில் இன்னமும் இருக்கும் உல்ஃபா தீவிரவாதம் முழுக்க முழுக்க பொருளாதாரம் சம்பந்தப்பட்டதே.

இந்தியாவில் மாநிலங்களுக்கிடையே பெரிய அளவில் பல்வேறு பிரச்சினைகள் வந்துள்ளன. மஹாராஷ்டிரத்தில் 'மண்ணின் மைந்தர்கள்' போராட்டம் அம்மாநிலத்தில், முக்கியமாக மும்பை நகரத்தில், குஜராத் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் சொந்த மாநிலத்தாரின் வேலை வாய்ப்புகளையும், வாழ்க்கையையும் பறித்து விட்டது என்றதனால் எழுந்தது. இது வன்முறையாகிப் பல வெளி மாநிலத்தார் உயிர், உடைமைகளைத் துறக்க நேரிட்டது. இப்பொழுதும் அந்தக் கலவரங்களை உருவாக்கிய சிவசேனை தேவைப்படும் போதெல்லாம் இந்தத் தீவிரவாதத்தை வெளிக்கொணர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் இன்று மும்பையில் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால் இப்பிரச்சினை அடிதடியிலோ, உயிரிழப்பிலோ போய் முடிவதில்லை. மேற்கு வங்கத்திலிருந்து (சிவசேனை பங்களாதேஷ் என்கிறது, பாஜபாவும் ஒத்து ஊதுகிறது) வந்து பிழைப்பைத் தேடும் ஏழைகளை ஊரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று சிலநாட்களுக்கு முன்னால் சிவசேனை தாண்டவமாடியது. அது இப்பொழுது ஓரளவுக்கு அமுங்கிப் போயிருக்கிறது.

தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்குமிடையே காவிரிப் பிரச்சினையைத் தொடர்ந்து பெரிய கலவரங்கள் வெடித்து பெங்களூரில் தமிழர்கள் உயிர், உடைமைகளை இழக்க நேரிட்டது. அப்பொழுதும் காவிரியோடு, வேலை வாய்ப்புகள் பறிபோவதும் பெரிதாகக் காட்டப்பட்டது.

உல்ஃபா (ULFA) அஸ்ஸாமில் பங்களாதேஷிலிருந்து பிழைக்க வந்தவர்கள் அஸ்ஸாமியர்களை விட அதிகமாகி தங்கள் வாழ்வுக்கே உலை வைத்து விடுவார்களோ என்று பயந்ததால்தான் ஆரம்பித்தது. அப்பொழுது அஸ்ஸாமிய மாணவர் இயக்கம் (All Assam Student's Union) வலுவடைந்து ஒரு மாபெரும் அரசியல் இயக்கமாகி, ஆட்சியைக் கைப்பற்றியது, அப்படி முதல்வரான பிரஃபுல்ல குமார் மொஹந்தா இப்பொழுது பேரே தெரியாமல் இருக்கிறார். உல்ஃபா மட்டும் கணிந்து கொண்டே இருந்தது இப்பொழுது பீஹாரிகளின் மேல் வன்முறையைத் திருப்பியுள்ளது.

பத்து நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் கலவரம் இது. இதன் பின்னணி என்ன?

No comments:

Post a Comment