Wednesday, November 05, 2003

குருமூர்த்தியின் "Legalising a fraud, the TRAI way" கட்டுரை - 2

ஆக, 1992 முதல் 2002 வரையிலான பத்து வருடங்களில் எண்ணற்ற மாற்றங்கள். 1992க்கு முதல் அரசு மட்டும்தான். நாட்டில் செல்பேசியே கிடையாது. 2002இல் ISD சேவையை அளிப்பது தனியார் நிறுவனங்கள் மட்டுமே! (அரசுக்கும் VSNLஇல் கொஞ்சம் பங்கு இருக்கிறது என்றாலும் நிறுவனத்தின் நிர்வாகம் முழுதும் டாடா கைகளில்). கம்பி மூலம் கிடைக்கும் தொலைபேசியை விட செல்பேசிதான் வெகு வேகமாக விற்கிறது. இன்னும் சில நாட்களில் நாட்டில் செல்பேசிதான் கம்பி-பேசிகளை விட அதிகமாக இருக்கும்.

இதைத்தான் disruptive technology என்கிறோம். அமைதியாகப் போய்க்கொண்டிருக்கும் வாழ்க்கையில் பெருங்குழப்பத்தை உண்டுபண்ணி, கலக்கியடித்து, மீண்டும் அமைதி ஏற்படும் போது எக்கச்சக்க மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும்.

இப்பொழுது ரிலையன்ஸ் மீதுள்ள குற்றச்சாட்டைப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் பெட்ரோகெமிக்கல் முதல் பாலியெஸ்டர் யார்ன் செய்வதிலிருந்து, மின்சாரம் உற்பத்தி செய்து அதனை மும்பை, தில்லி நகரங்களுக்கு வழங்குவதில், பூமிக்கடியிலிருந்து எண்ணெய், எரிவாயு தோண்டி எடுப்பது என்று பிரம்மாண்டமான திட்டங்களில் இறங்கும் மிகப்பெரிய நிறுவனம். எல்லாமே பத்தாயிரம் கோடு ரூபாய்களுக்கு மேற்பட்ட திட்டங்கள். இந்த நிறுவனத்தின் மேல் பல புகார்கள் - சட்டங்களில் ஓட்டைகளையெல்லாம் எப்படி ஆராய்ந்து அதனைத் தனக்கு சாதகமாக மாற்றிக் கொள்கின்றனர் என்று.

தொலைதொடர்பு என்று எடுத்துக் கொண்டால் ரிலையன்ஸ் வெகு நாட்களுக்கு இதில் சரியாக ஒன்றும் ஈடுபடவில்லை. C வட்டம் என்று சொல்லக்கூடிய விலை குறைந்த லைசென்ஸ் தொகையுள்ள இடங்களில் மட்டுமே GSM முறையிலான செல்பேசிச் சேவையை அளித்து வந்தனர் - மேற்கு வங்காளம், வடகிழக்கு மாநிலங்கள், மத்தியப் பிரதேசம் போன்ற இடங்களில்தான் இருந்து வந்தனர். VSNL விற்பனைக்கு வந்தபோதும் டாடா நிறுவனத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

இதற்கு முன்னரே அரசு கம்பி மூலம் தொலைபேசிச் சேவையை வழங்குவதை தனியார்ப்படுத்த முற்பட்டது. அப்படிச் செய்கையில் "limited mobility" என்றொரு பதத்தை இந்த 'Basic Telephony License'க்குள் விதைத்தது. அதுவரை basic telephony ஆனது கம்பி மூலம் கட்டிடங்களுக்கு இணைப்பு கொடுப்பது என்று இருந்தது. சென்னை ஐஐடியில் அஷோக் ஜுன்ஜுன்வாலா என்னும் பேராசிரியரின் ஆராய்ச்சிக் குழு corDECT என்னும் முறைப்படி 'wireless in the Local Loop' என்னும் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்தது. இதேபோல் அமெரிக்காவிலும் மொடொரொலா போன்ற நிறுவனங்கள் ஒரு தொழில்நுட்பத்தைக் கையாண்டு வந்தனர். இதன்படி கட்டிடங்களுக்கு தொலைபேசி இணைப்பு வழங்குகையில் கடைசி மைல் (அதாவது தெருக்கோடியில் உள்ள தொலைபேசி இணைப்பகப் பெட்டியிலிருந்து உங்கள் வீட்டுகு வரும்) இணைப்பை கம்பி மூலம் செய்யாது வயர்லெஸ் மூலம் செய்வதுதான் இது.

இது செலவைக் குறைக்கக் கூடியதொன்று. தாமிரக் கம்பிக்கான காசுக்கு இந்த மாதிரி கார்டெக்ட் டப்பாவை ஒவ்வொரு வீட்டிலும் வைத்துவிட்டுப் போகலாம். நகராட்சிக் காரர்கள் ரோடுகளைத் தோண்டும் போது உங்கள் வீட்டுத் தொலைபேசி இணைப்பு கெட்டுப்போகாது. மழையினால் தொல்லை இல்லை.

இதை மனதில் வைத்துதான் மத்திய அரசு 'limited mobility' என்பதையும் இந்த அடிப்படைத் தொலைபேசி இணைப்பாளர்கள் (basic telephony companies) கொடுக்கலாம் என்று முடிவு செய்தது.

ஆனால் நடந்தது வேறு.

International Engineering Consortium இப்படிப்பட்ட ஒரு விளக்கத்தைக் கொடுக்கிறது:

"Sometimes called radio in the loop (RITL) or fixed-radio access (FRA), WLL is a system that connects subscribers to the public switched telephone network (PSTN) using radio signals as a substitute for copper for all or part of the connection between the subscriber and the switch. This includes cordless access systems, proprietary fixed radio access, and fixed cellular systems."

இந்த "fixed cellular systems" ஐ மனதில் வைத்துக் கொண்டு ரிலையன்ஸ் நாடு முழுவதற்குமான அடிப்படைத் தொலைபேசி லைசென்ஸுகளை வாங்கிக் குவித்தது. பின்னர் நாடு முழுவதும் தனது CDMA முறையிலான "fixed cellular systems" செல்பேசிச் சேவையினை அளிக்க ஆரம்பித்தது. இதுவரை செல்பேசிச் சேவையினை அளித்து வந்த நிறுவனங்கள் இதை எதிர்த்தன. TDSAT எனப்படும் தொலைபேசி சம்பந்தமான பிரச்சைனைகளின் தீர்வாயத்திற்குச் சென்று முறையிட்டன. TRAI எனப்படும் தொலைதொடர்பு நிறுவனச் சேவைகளை கண்காணிக்கும் குழுமத்திடம் சென்று முறையிட்டன. அரசிடம், அமைச்சர்களிடம் புகார் செய்தன. உச்ச நீதிமன்றம் வரை சென்று சண்டை போட்டன.

இப்பொழுது கடைசியாக அரசு என்ன முடிவெடுத்துள்ளது? அடிப்படைத் தொலைபேசி நிறுவனங்கள் மேலும் லைசென்ஸ் தொகை செலுத்தி ஒருமித்த லைசென்ஸுகளை வாங்கி அடிப்படை [கம்பித்] தொலைபேசி, செல்பேசி என எது வேண்டுமானாலும், எங்கு வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம் என்பதுதான் அது.

இதை எதிர்த்துதான் குருமூர்த்தி தன் கட்டுரையில் எழுதியுள்ளார்.

எனக்கு குருமூர்த்தியின் கருத்தில் உடன்பாடில்லை. ரிலையன்ஸ் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை. ஆனால் தேக்கம் அடைந்துள்ள தொலைதொடர்புத் துறையில் இதுவரை பணம் போட்டவர்கள் தீர்க்கமான திட்டம் எதையும் கையில் வைக்காமல், மிகக் குறுகிய நோக்கிலேயே செயல்பட்டுள்ளனர். இதனால்தான் ரிலையன்ஸ் மிகக் குறுகிய காலத்தில் (ஒரு வருடத்திற்குள் குறைவாகவே) 50 லட்சம் உறுப்பினர்களைப் பெற முடிந்துள்ளது.

100 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டில் 20 கோடி மக்களாவது தொலைபேசி இணைப்பைப் பெற விரும்புகின்றனர். ஆனால் விடுதலை ஆகி 50 ஆண்டுகள் வரையிலும் இன்னமும் வெறும் 6 கோடிதான் தொலைபேசி இணைப்பைப் பெற முடிந்துள்ளது. அதிலும் 2 கோடிப்பேர் செல்பேசியினால் - கடந்த 3 ஆண்டுகளில் இணைப்பு பெற்றவர்கள். அதிக மூலதனம் தேவை, அதே சமயம் நாடு முழுதும் இதுபோன்ற பெரிய திட்டங்களை நிறைவேற்றக் கூடிய மனப்பான்மையும் தேவை.

தொலைபேசி இணைப்பு அதிகமாக அதிகமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகமாகும் என்பது கண்கூடாகக் காணக்கூடியது. அதற்காக ஒருசில சட்டத்தின் ஓட்டைகளை நெம்புவது தவறென்று எனக்குத் தோன்றவில்லை.

[பி.கு. இதுபற்றிய என் கருத்துகள் கடந்த ஆறு மாதங்களில் நிறைய மாற்றம் அடைந்துள்ளது.]

No comments:

Post a Comment