காலச்சுவடு, இதழ் 50, நவ-டிச 2003 இல் செழியன் என்பவர் எழுதியுள்ள 'வெற்றிடத்திலிருந்து எழும் குரல்' என்னும் தமிழ் சினிமாவைப் பற்றிய கட்டுரை படிக்க வேண்டியது.
எனக்குள் எப்போதும் எழுந்து கொண்டிருக்கிற பல கேள்விகளை முன் வைக்கிறார் கட்டுரையாசிரியர். இத்தனை ஆண்டு காலம் கழித்தும் தமிழ்த்திரைப்படத்தில் முதிர்ச்சியே இல்லாது சர்வதேசத் தரத்தில் ஒரு திரைப்படமும் இல்லாதது ஏன் என்பதுதான் கேள்வி. தமிழில் சிறுகதை, நாவல், கவிதை ஆகியவற்றில் சர்வதேசத் தரத்தில் நிச்சயமாகப் பல படைப்புகளை இனங்காட்ட முடியும். ஆனால் சினிமா என்று வரும்போது?
செழியனின் கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள்:
"தொழில்நுட்பத்தில் நாம் மேதமைகளைத் தேசிய அளவில் நிரூபிக்கிற சந்தர்ப்பங்கள் நிகழ்ந்திருக்கலாம். கருத்து மற்றும் அழகியல் ரீதியான படைப்பு சார்ந்த மேதமை நம் படங்களில் இருக்கிறதா? ஃபிரான்சின் புதிய அலையைப் போல எழுபதுகளில் தமிழில் தீனமான அலை எழுந்தது. புதுக்கவிதைக்கென வானம்பாடி, சிற்றிதழ்களுக்கென எழுத்து, மணிக்கொடி, சரஸ்வதி, அரசியலில் திராவிட மறுமலர்ச்சி முதலான முயற்சிகள் இயக்கங்களாக எழுந்து நிகழ்ந்தன. அவ்வாறான வாய்ப்பு ஏன் நம் திரைப்படங்களுக்கு நிகழவில்லை?"
ஏன் நிகழவில்லை? இன்று வரை?
எம்ஜியார், சிவாஜி, ரஜினி காந்த், கமல ஹாசன் ஆகியோரைப் பற்றிய நேர்மையான, பயமற்ற கருத்துக்களைக் கூறும் செழியன் "தனது தீவிரமான பங்களிப்பை நேரடியாகத் தருவதன் மூலம் ஒர் இலக்கிய ஆசிரியன்தான் தமிழ்ப்படத்தை அதன் நோய்க்கூறுகளிலிருந்து மீட்டெடுக்க முடியும்" என்று நம்புகிறார். அந்த நம்பிக்கைதான் எனக்கும்.
குறள் – கவிதையும், நீதியும்.
1 hour ago
No comments:
Post a Comment