Saturday, November 08, 2003

தமிழக சட்டசபையும் பத்திரிக்கை சுதந்திரமும்

தமிழக சட்டசபையின் பெயரில்தான் 'தி ஹிந்து' பதிப்பாளர், ஆசிரியர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், முரசொலியின் ஆசிரியர் ஆகியோருக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அனைவருக்கும் தெரியும் இதில் முழுப்பொறுப்பும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கே என்று.

[விஷயம் தெரியாதவர்களுக்கு: தி ஹிந்து நாளிதழ் சட்டமன்ற நிகழ்வுகளை தினமும் தன் பத்திரிக்கையில் பதிவு செய்து வந்தது. அதில் தகாத, கேவலமான வார்த்தைகள் வந்துள்ளதாகவும், இதனால் அவை மரியாதை கெட்டுப் போய் விட்டதாகவும் உரிமைப் பிரச்சினை எழுப்பப் பட்டது. இதனை விவாதிக்க துணையவைத் தலைவர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப் பட்டிருந்தது. ஜெயலலிதா தலைமையிலான அதிமுக எவ்வாறு நடந்து கொள்ளும் என்று எதிர்பார்த்து தி ஹிந்து ஒரு தலையங்கம் வெளியிட்டிருந்தது. அதனையும் கருத்தில் கொண்டு அந்தத் தலையங்கத்தை நிரூபிக்கும் வகையில் ஒட்டு மொத்தமாக தி ஹிந்துவின் ஊழியர்கள் ஐந்து பேருக்கு சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது தமிழக சட்டமன்றம். இந்த மேற்குறிப்பிட்ட தலையங்கத்தைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்ட முரசொலியின் ஆசிரியருக்கும் சிறை தண்டனை. இந்த தண்டனைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டது. இன்று, இப்பொழுது வரை இவர்கள் யாரையும் காவல்துறையினரால் பிடிக்க முடியவில்லை.]

இதில் வெட்கக்கேடு அவைத்தலைவர் காளிமுத்துவுக்கே. இவர் பெயரில்தான் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குரல் வாக்கெடுப்பில் இதை ஆமோதித்த அஇஅதிமுகவின் உறுப்பினர்கள் அனைவரும் வெட்கக்கேட்டில் பங்கு ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இப்பொழுது பல கண்டனங்கள் வந்தவண்ணம் உள்ளன. இதனால் ஒரு பிரயோசனமும் இல்லை என்றே தோன்றுகிறது. உச்ச நீதிமன்றத்துக்கு செல்கிறார் 'தி ஹிந்து' ராம். இதன் மூலம் ஒரு குடியுரிமைச் சட்டப் பிரச்சினை உண்டாகும். சட்டமன்றம் விதித்த தண்டனையை ரத்து செய்ய உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டா என்று நீதிமான்கள் மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். எல்லோரும் உண்ணாவிரதப் போராட்டமும், வாயில் கருப்புத் துணி கட்டிய போராட்டமும் நடத்தி விட்டு மீண்டும் வீட்டு/அலுவலக வேலையைக் கவனிக்கப் போவார்கள்.

எப்பொழுதாவது அரிதாகத் தோன்றும் பிரச்சினை இது. இது தோன்றுவதற்கு முக்கியமாக சர்வாதிகாரத் திமிர் பிடித்த, ஜனநாயகத்தைச் சிறிதும் மதிக்காத, ஜனநாயகத்தின் எந்த ஒரு உறுப்பினிடமும் சிறிதும் பயமே இல்லாத ஒருவர் வேண்டும். இப்பொழுது அப்படி இருப்பதால்தான் இதெல்லாம் நடக்கிறது.

இப்பொழுதைய தமிழக முதல்வருக்கு தன் கட்சியில் எவரிடமும் பயம் இல்லை. மக்களிடம் பயம் இல்லை. சட்டத்தினிடம் பயம் இல்லை. கடவுளிடம் பயம் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. ஏன், தன் மனசாட்சியிடமே பயம் இருக்கிறதா என்றும் தெரியவில்லை. ஹிட்லருடன் பலரும் ஒப்பிடுகிறார்கள். நல்லவேளையாக இராணுவம் எதுவும் இவரது ஆளுகைக்குள் இல்லை. இதுவரைப் பலரை சிறையில் போட்டிருக்கிறாரே ஒழிய வெளிப்படையாகக் கொலை எதுவும் செய்தது போல் தெரியவில்லை. மற்றபடி ஜனநாயகத்துக்கு மிகவும் எதிரானவர் என்பது பல செய்கைகளில் தெரிய வருகிறது.

பாதியில் ஆட்சியைக் கலைக்க முடியாது - கலைப்பதும் தவறாகும். தமிழக மக்கள் செய்த தவறை நினைவில் வைத்திருந்து இனி மீதி இருக்கும் ஆட்சி நேரத்தில் மேற்கொண்டு கொடுமைகள் நேராத வண்ணம் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும். அடுத்த தேர்தலின் போது இம்மாதிரி தவறு ஏதும் நேராத வண்ணம் தமிழக மக்கள் நடந்து கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment