Saturday, November 22, 2003

தமிழகக் காங்கிரஸின் புதுமுகம்

நேற்று வாசனை வரவேற்க ஒன்றும் கூட்டம் அதிகமில்லை என்று எழுதியிருந்தேன். அது சரியல்ல என்று இன்றைய தினமலரைப் படிக்கும்போது தெரிகிறது.

மேலும், தற்போதைக்கு கோஷ்டிப்பூசல் வெளியே தெரியா வண்ணம் இளங்கோவன் முதல், சோ.பாலகிருஷ்ணன் வரை அனைவரும் பதவியேற்புக்கு வந்திருந்தனர் என்று தெரிகிறது.

தமிழகக் காங்கிரஸ் வலுவானதொரு அணியாக வேண்டும் என்பது என் விருப்பம். ப.சிதம்பரமும் இந்தக் காங்கிரஸ் அணியோடு இணைந்து, திமுக, அஇஅதிமுக வுக்கு மாற்றாக ஒரு சக்தியை உருவாக்க வேண்டும்.

கர்நாடகத்தில் சில வருடங்களுக்கு முன்னர் காங்கிரஸில் கோஷ்டிப் பூசல் இருந்தது. இப்பொழுது கிருஷ்ணா தலைமையில் இந்தக் குழப்பங்கள் ஏதும் இல்லாது வலுவாக இருப்பதால்தான் அந்த மாநிலத்தின் அரசாங்கம் சகிக்கும்படியாக உள்ளது. மேலும் வலுவான மூன்று அணிகள் - காங்கிரஸ், பாஜபா, ஜனதா ஆகியவை - இருப்பதும் அரசினாலும், ஆளுங்கட்சியினாலும் ஜனநாயக நெறிமுறைகளை மீறாது இருப்பதற்கு உதவியாக உள்ளது.

ஆந்திராவில் காங்கிரஸ் வலுவிழந்து போயிருப்பது ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. அந்த மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஒரேயொரு கட்சி - தெலுகு தேசம் - மட்டும் வலுவாக இருந்தும் இப்பொழுதைக்கு ஏதோ சந்திரபாபு நாயுடு நல்ல மனிதராக இருப்பதால் ஜனநாயகப் பண்புகளாவது காப்பாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கருணாகரன் போன்ற கிழட்டுப் பதவி ஆசைக்காரர்களின் கோஷ்டிப்பூசலினால், நியாயமான அந்தோணியின் ஆட்சி கேரளத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறது. காங்கிரஸ் "மேலிடம்" இன்னமும் ஏன் கருணாகரனின் அடத்தை சகித்துக் கொண்டிருக்கிறது?

No comments:

Post a Comment