Saturday, November 15, 2003

குருமூர்த்தியின் 'பெட்ரோல் - அது ஒரு பெரிய ஆயுதம்' - 2

இந்தக் கட்டுரை பற்றிய என் கருத்து:

1. இஸ்லாமிய நாடுகள் அனைத்துக்கும் எண்ணெய் வளம் கிடையாது. அப்படி எண்ணெய் வளம் இருக்கும் நாடுகளில் மட்டுமே அமெரிக்கா புகுந்து குழப்பம் விளைவிக்கிறது. [முன்னர் ஆஃப்கானிஸ்தானத்தில் ரஷ்யாவிற்கு எதிராக இருப்பதற்காகக் குழப்பம் விளைவித்தது.] அதைப்பற்றிய ஒரு கண்டனத்தையும் குருமூர்த்தி முன்வைக்கவில்லை. அமெரிக்கா செய்வது அனைத்தும் சரி என்றும், அதனைப் புகழுமாறு எவ்வாறு பல்வேறு 'அர்த்த சாத்திர' சாம, தான, பேத, தண்ட முறைப்படி ஒவ்வொரு எண்ணெய் வள முஸ்லிம் நாட்டையும் அமெரிக்கா தன் கைக்குள் போட்டு வைத்துள்ளது என்று விவரிக்கிறார். முக்கியமாக அமெரிக்கா இராக்கில் புகுந்து இப்பொழுது வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கிறது. மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல்.

2. மாறுபட்ட எரிபொருள்கள் என்னவோ ஒரேயடியாக எண்ணெயின் மீதுள்ள சார்பைக் குறைத்து விடும் என்று எண்ணுவது மிகவும் ஆபத்தானது. அப்படித்தான் 'அணுப்பிளவு' மற்றும் 'அணுக்கூடல்' மூலமாக மின்சாரம் தயாரிப்பது பற்றிய ஒரு கருத்து நிலவி வந்தது. இன்று உலகில் ஓரிரண்டு நாடுகளில்தான் இவ்வகையால் தேவையான அளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது (உம்: ஃபிரான்ஸ்). அதுபோலவே சூரிய ஒளியினால் ஆன சக்தி போன்றவையும். இவற்றிலிருந்து உருப்படியான வகையில் சக்தியைப் பெறுவது, அதனை மின்சாரம் போன்ற சக்திக்கு மாற்றுவது ஆகியவை வெகு தொலைவில் உள்ளது. அதுவரை உலக நாடுகள் எண்ணெய் மீதான் சார்பிலிருந்து விடுபட முடியாது. ஆனால் இதனை அமெரிக்கா தன் பலத்தால், குயுக்தியால் மற்றும் குழப்பம் விளைவிப்பதால் தனக்கு சாதகமாக எண்ணெய் வள நாடுகளை வைத்திருப்பது உலக நாடுகளுக்குக் கெடுதலையே விளைவிக்கும்.

3. குருமூர்த்தியின் அரபு நாடுகளுக்கான அறிவுரை சற்றே சிரிப்பையும் எரிச்சலையும் வரவழைக்கிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் இதர இந்து அடிப்படைவாதக் குழுக்களின் முஸ்லிம் எதிர்ப்பு நிலையைத்தான் நம்மால் அதில் பார்க்க முடிகிறது. ஏதோ இஸ்லாமிய நாடுகள் அனைத்தும் தீவிரவாதத்தை வளர்ப்பதாகவும், அதுவும் அவர்களது பிறமதங்களின் மீதான நிலைப்பாடுகளினால்தான் இவற்றைச் செய்வதாகவும் நினைப்பது, உண்மைக்கு மிகவும் புறம்பானது. 'நீ மரியாதையாக உன் நினைப்பை மாற்றிக்கொள், இல்லாவிட்டால் உம்மாச்சி உன்னிடமிருந்து எண்ணெய் மூலம் கிடைத்துள்ள அதிகாரத்தைப் பறித்துக் கொண்டு விடுவார்' என்பது போல பூச்சாண்டி காட்டுகிறார்.

எண்ணெய் வள இஸ்லாமிய நாடுகளுக்குள் பல குழப்பங்கள் உள்ளன. சவுதி அரேபியா தற்போது தீவிரவாதத்தின் பலனை அனுபவிக்க ஆரம்பித்து விட்டது. அங்கு குடியரசு ஆட்சி கிடையாது. மக்களுக்கான உரிமைகள் மிகவும் குறைவு. சுற்றியுள்ள மற்ற எண்ணெய் வள நாடுகளில் முக்கியமான இராக் தற்பொழுது கடும் குழப்பத்தில் மாட்டியுள்ளது - அத்தனையும் சதாம் ஹுசேன் மற்றும் அமெரிக்காவின் கூட்டு முயற்சியினால் ஆன குழப்பம். புதை சேறு. இதிலிருந்து அவர்களுக்கு எப்பொழுது விடுதலை கிடைக்கும் என்று தெரியவில்லை. குவைத், சவுதியைப் போன்று சர்வாதிகார ஆட்சியில் இருக்கும் அமெரிக்கக் கைக்கூலி நாடு. அங்கும் குழப்பம் வர நாள் அதிகம் இல்லை. பல முன்னாள் சோவியத்தில் இருந்த நாடுகள் (அசர்பைஜான், கசக்ஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் போன்றவை) எண்ணெய் வளங்களைக் கைப்பற்றிக் கொள்ள ரஷ்யாவும், அமெரிக்காவும் பெரும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. ஆஃப்கானிஸ்தானின் குழப்பங்கள் அத்தனைக்கும் காரணம் இந்த முன்னாள் சோவியத் நாடுகளின் எண்ணெய் வளங்களே என்ற உண்மையும் பலரால் வெளியிடப்பட்டுள்ளது.

எனக்கென்னவோ இந்த எண்ணெய் வளமே 'கடவுள்' கொடுத்த தண்டனை என்று தோன்றுகிறது. அரபு நாடுகள் எப்பொழுது குடியாட்சி முறையை மேற்கொள்கிறதோ, எப்பொழுது தனிமனித சுதந்திரத்துக்கு வழி கொடுக்கிறதோ, அப்பொழுதுதான் அவர்களுக்கும், உலகுக்கும் நிம்மதி. அவர்களது மத நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்வதால் மட்டும் எந்த விதமான நன்மையும் அவர்களுக்கோ, பிற நாடுகளுக்கோ ஏற்படப் போவதில்லை.

====

முந்தையது: கிராமப்பஞ்சாயத்து 1 | 2 | 3 &       மிருகபலி

No comments:

Post a Comment