Sunday, November 30, 2003

ப.சிதம்பரம் - அந்தத் தூண் அசையாமல் இருக்கட்டும்!

ப.சிதம்பரம் - அந்தத் தூண் அசையாமல் இருக்கட்டும்!
கல்கி 30/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 6

இந்தக் கட்டுரையில் சிதம்பரம் நீதிமன்றங்களைப் பற்றிப் பேசுகிறார்.

* கீழ்நிலையிலுள்ள நீதிமன்றங்களில் - முன்சீப் கோர்ட், மாஜிஸ்டிரேட் கோர்ட் அல்லது செஷன்ஸ் கோர்ட் ஆகியவற்றில் - வழங்கப்படும் தீர்ப்புகளைப் பற்றி யாரும் விமரிசனமோ, விவாதமோ செய்வதில்லை. இந்த நீதிமன்றங்களில் மிகப் பெரிய ஒழுக்கச் சீர்குலைவு ஏற்பட்டுள்ளது.

* உயர்/உச்ச நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அதிகமாக விவாதிக்கப்படுகின்றன, வெளியாகின்றன. ஆனால் இங்குள்ள பிரச்சினைகளே வேறு. தகுதியுடைய நீதிபதிகள் கிடைக்காத காரணத்தால் பல இடங்கள் உயர் நீதிமன்றங்களில் காலியாக உள்ளன. ஒருசிலர் நீதிபதிகளாக நியமிக்கப்படும் போது அவர்களுக்குத் தெரிந்தவர்களே புருவத்தை உயர்த்துகின்றனர் (அதாவது நீதிபதிகளின் தகுதியின்மை - அறிவு, ஒழுக்கம், நேர்மை ஆகியவற்றில் குறைபாடு இருக்கும் என்ற சந்தேகத்தால்).

* மற்ற நாடுகளில் இருப்பதைப் போலல்லாமல் இந்தியாவில் உயர்/உச்ச நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளைத் தேர்ந்தெடுப்பதில் அரசும், அரசியல் தலைவர்களும் ஈடுபடக்கூடாது என்றும் இந்தத் தேர்வினை மூத்த நீதிபதிகளே செய்வார்கள் என்றும் சில வருடங்களுக்கு முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அப்படியும் இன்னமும் பல இடங்கள் காலியாக உள்ளன. இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நீதிபதிகள் மீதும் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுகின்றன. [இவ்விடத்தில் ராம் ஜேத்மலானியின் நீதி வாரியம் பற்றிய கருத்துக்களையும் நினைவு கூரவேண்டும். அதைப் பற்றிய என் இரு வலைப்பதிவுகள்: 1 | 2]

* அரசுக்கு எதிராகத் தொடரப்படும் வழக்குகளில் [உயர்/உச்ச] நீதிமன்றங்கள் அரசின் பக்கமே அதிகம் சாய்வது போல் இருக்கிறது. அரசு வழங்கும் ஒப்பந்தங்கள், லைசென்ஸுகள் ஆகியவற்றில்தான் அதிக பட்ச ஊழல்கள் நடக்கின்றன. ஆகவே இந்த ஒப்பந்தங்களையும், வழங்கப்பட்ட முறைகளையும் நீதிமன்றங்கள் ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும்.

* நீதிமன்றங்களில் ஏற்படும் தாமதம் - தாமதமாக வரும் தீர்ப்பின் மேல் நம்பகத்தன்மை குறைவாக உள்ளது. தாமதம் ஏற்படுவதால் சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றன. சாட்சிகள் இறந்துவிடுகின்றனர்.

* ஆனாலும் மக்களாட்சியின் மனித உரிமைகளை நிலைநாட்டுவதில் நீதிமன்றங்களின் பங்கு மிகவும் பாராட்டப்படவேண்டியது.

* நீதிமன்றங்கள் வலிமையாக இருக்க வேண்டுமானால் என்ன செய்யலாம் என்று சில அறிவுரைகள் சிதம்பரத்திடமிருந்து வருகிறது. (அ) நீதிபதிகளுக்கு சம்பளத்தை அதிகப்படுத்த வேண்டும், அப்பொழுதுதான் திறமை மிக்கவர்களைக் கவர முடியும். (ஆ) நீதிபதிகளுக்குத் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையாவது தொடர் கல்வி அளிக்க வேண்டும்.

கல்கி 23/11/2003 இதழ், ப.சிதம்பரத்தின் 'நமக்கே உரிமையாம்' - 5

No comments:

Post a Comment