Sunday, November 23, 2003

அஸ்ஸாமும், பீஹாரும் - 2

இந்திய இரயில்வே வேலைவாய்ப்பு வாரியம் கிழமேற்குப் பகுதிகளுக்கான வேலைக்கான தேர்வை அஸ்ஸாமில், 9 நவம்பர் 2003 அன்று நிகழ்த்தியது. இதில் பீஹாரைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் தங்களை அஸ்ஸாம் மாணவர்கள் அடித்ததாகவும், தேர்வு நுழைவுச் சீட்டைக் கிழித்துப் போட்டதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். 11 நவம்பர் 2003 அன்று பீஹார் திரும்பிய இந்த மாணவர்கள் இனி இரயில்வே தேர்வினை தங்கள் மாநிலத்திலேயே வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு இரயில் நிலையம் ஒன்றைச் சூறையாடி, ஒரு சில இரயில் வண்டிகளைப் போகவிடாமல் தடுத்துக் குழப்பமும் விளைவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக மறுநாளும் பீஹாரி மாணவர்கள் அஸ்ஸாமுக்குச் செல்லும் இரயில்களை அடித்து நொறுக்கிக் கொள்ளை அடித்துள்ளனர்.

இப்படி ஆரம்பித்த விவகாரம் இன்று மிகப் பெரிய அளவிற்குச் செல்லக் காரணம் உல்ஃபா. ஏதேனும் ஒரு காரணத்துக்காகக் காத்திருந்த இந்தத் தீவிரவாத அமைப்பு இதனைக் கையில் எடுத்துக் கொண்டு அஸ்ஸாமில் இருக்கும் ஏழை பீஹாரித் தொழிலாளர்களைக் குறிவைத்துக் கொன்று குவிக்கத் தொடங்கியது. பீஹாரில் நடந்தது வெறும் அடிதடி வன்முறையே. உயிர் சேதம் இல்லை. ஆனால் இதனைத் தொடர்ந்து இதுவரை அஸ்ஸாமில் ஐம்பதுக்கும் மேற்பட்ட பீஹாரிகளை உல்ஃபா தீவிரவாதிகள் கொன்று விட்டனர்.

இன்னமும் கொலைகள் நிகழும் என்றுதான் தோன்றுகிறது. உல்ஃபா ஹிந்தி பேசுபவர்களை அஸ்ஸாமிலிருந்து வெளியேறச் சொல்லியுள்ளது. பீஹாரிகள் கூட்டமாக வெளியேறத் துவங்கி விட்டனர்.

இந்தியாவின் கிழமேற்குப் பகுதிகள் மிகவும் வளர்ச்சி குன்றிய பிரதேசங்கள். இளைஞர்கள் அனைவரும் அரசாங்க வேலையை நம்பியே இருக்க வேண்டிய கட்டாயம். இம்மாதிரிப் பற்றாக்குறை இருக்கும்போதுதான் அஸ்ஸாமியன், பீஹாரி என்ற எண்ணங்கள் தோன்றுகிறது, இந்தியன் என்ற எண்ணம் மறைகிறது. மேலும் அஸ்ஸாம், பீஹார் இரு மாநிலங்களும் கல்வியில் மிகவும் பின்தங்கியவை. பீஹார் ஊழல் மற்றும் வன்முறை மலிந்த ஒரு இடம். அஸ்ஸாம் தீவிரவாதிகள் நிறைந்த இடம். பல வங்காள மொழி பேசுபவர்களைக் கொலை செய்த இடம். இப்படிப்பட்ட இடத்தில் இதுமாதிரி ஒரு வன்முறை வரும் என்பதை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?

  1. உல்ஃபா தீவிரவாதிகளை ஒடுக்க இராணுவம் முயல வேண்டும்.
  2. பீஹார், அஸ்ஸாம் ஆகிய இரு மாநிலங்களுக்கும் மத்திய அரசு நிதியுதவி அளித்து அங்கு கல்வியறிவை வளர்க்கத் தேவையான முயற்சிகளை உடனே எடுக்க வேண்டும். மேலும் வேலை வாய்ப்புகள் பெருகுமாறு தொழிற்சாலைகளை அமைக்கும் நிறுவனங்களுக்கு முழு வரிவிலக்குக் கொடுக்க வேண்டும்.
  3. இன்னமும் ஒருபடி மேலே போய் தனியார் நிறுவனங்கள் உருவாக்கும் ஒவ்வொரு வேலைக்கும் இத்தனை ரூபாய்கள் என்று அந்த நிறுவனங்களுக்கு மானியம் அளிக்கலாம். அதாவது ஒரு நிறுவனம் 20 உள்ளூர்க்காரர்களுக்கு வேலை வழங்கினால் அந்த நிறுவனத்துக்கு ஒவ்வொரு வேலைக்கும் வருடத்திற்குப் பத்தாயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக ரூ. இரண்டு லட்சம் வழங்கலாம். இந்தச் சலுகையை ஐந்து ஆண்டுகளுக்குக் கொடுக்கலாம்.
  4. அரசு நிறுவனங்கள் மூலமாக இணையம், தொலைபேசி ஆகியவற்றின் கட்டணங்களை இந்த மாநிலங்களில் கணிசமாகக் குறைக்கலாம். பீ.எஸ்.என்.எல் போன்ற அரசின் தொலைதொடர்பு நிறுவனமோ, அல்லது தனியார் நிறுவனமோ இணையக் கட்டணம் 1mbps க்கு ரூ. பத்து லட்சம் ஒரு வருடத்திற்கு என்றால், அதனைப் பயன்படுத்தும் நிறுவனங்களுக்கு ஐந்து லட்சத்திற்குக் கொடுத்து, மீதி ஐந்து லட்சத்தை மத்திய அரசிடமிருந்து பெறலாம். இதனால் அறிவு சம்பந்தமான தொழில்கள் பீஹார், அஸ்ஸாம் போன்ற இடங்களில் அதிகமாகும். BPO மற்றும் இதர IT தொழில்கள் அதிகமாகும்.
  5. தனியார் நிறுவனங்கள் நடத்தும் கல்லூரிகள் மற்றும் கணினிப்பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் மானியம் தரலாம்.


இதிலும் ஊழல் நடக்கலாம். ஆனால் ஊழலைக் கட்டுப் படுத்துமாறு நிதியுதவிகள் மத்திய அரசிலிருந்து மாநில அரசுக்கும், அங்கிருந்து கீழ்நிலைப் பஞ்சாயத்துகளுக்கும் போகாமல் நேரிடையாக மக்களுக்குப் போய்ச்சேருமாறு செய்யலாம்.

இதே முறையை ஏழை மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டும். நக்சல் தொல்லையால் அவதிப்படும் ஆந்திரப்பகுதிகள், ராஜஸ்தான், ஒரிஸ்ஸா என்று மாவட்ட வாரியாக, மாநில வாரியாக அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் இந்தியா இரத்தக் களறியாக ஆகிவிடும்.

பகுதி 1

No comments:

Post a Comment